வலி சுமந்த வடக்குக்காக ஆளுநரானேன்- சாள்ஸ்

வலிகளை சுமந்த வடமாகாண மக்களுக்காக என்னை அர்ப்பணிப்பேன் என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற பொது அமைப்புக்களின் வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘வவுனியா மக்கள் இன்று எனக்கு வழங்கிய வரவேற்பை பாரக்கின்ற போது எனது மனம் கனத்துவிட்டது. பாரிய பொறுப்பொன்று எனக்கு சுமத்தப்பட்டுள்ளது என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

செயலாளராக பதவியேற்று ஒரு மாத கால பகுதிக்குள் ஜனாதிபதியால் வடமாகாண ஆளுநர் பதிவியை ஏற்குமாறு கோரப்பட்டிருந்தது.

பலமுறை தயங்கியும் மறுத்தும் இருந்த என்னை உடற்சாகப்படுத்திய எனது கணவர் உட்பட திரைமறைவில் செயற்பட்ட பல நண்பர்கள், என்னோடு கடமையாற்றிய சுங்க மற்றும் சுகாதார அமைச்சின் மிக சிரேஸ்ட அதிகாரிகள் உற்சாகப்படுத்தி இந்த நாட்டிற்காகவும் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மக்களுக்கு ஆகவும் நீங்கள் நிச்சயமாக சேவையாற்ற வேண்டும் என்று வற்புறுத்தியதன் காரணமாக இறுதியில் ஜனாதிபதியின் உத்தரவையேற்று வடமாகாணத்தின் ஆளுநராக வந்துள்ளேன்.

என்னுடைய சேவைக்காலம் இன்னும் முடிவுறவில்லை இளைப்பாறுவதற்கு முன்பே நான் இளைப்பாற வைக்கப்பட்டேன். எனது பிள்ளைகள் கொழும்பில் படித்தும் பணியாற்றி கொண்டு இருக்கின்ற நேரத்தில் எனது அனைத்து தேவைகளையும் எனது குடும்பத்தின் அத்தனை சுகங்களையும் துறந்துவிட்டு இளைப்பாறுகின்ற கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துவிட்டு இந்த பதவியை ஏற்றிருக்கிறேன் என்றால் இது சவாலுக்குரிய விடயமாகும்.

நீங்கள் காட்டிய அன்பை பார்க்கின்ற போது பாரிய சுமையொன்று என் தலை மீது சுமத்தப்பட்டுள்ளது என்பதை உணர்கின்றேன். நீங்கள் என்னை உங்களில் ஒருத்தி என்று சொன்னீர்கள். நிச்சயமாக நீங்கள் எல்லோரும் என்னுடையவர்கள். உங்களுக்காக நான் நிச்சயமாக இரவு பகலாக கடமையாற்றுவேன்.

ஜனாதிபதி என்னிடம் கோரிய விடயம் இந்த மாகாண மக்களிடம் தீராத வலிகள் இருக்கின்றது. ஆற்றுப்படுத்த வேண்டிய தேவையிருக்கின்றது,.நிறைவுறுத்தப்படாத வேலைகள் இருக்கின்றது, தேவைப்படுகின்ற அபிவிருத்திகள் இருக்கின்றன.

அத்தனையும் செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் உறுதுணையாக அனைத்தையும் செய்து தருவேன் என கூறி என்னை இங்கே அனுப்பி வைத்துள்ளார். எனவே அவருடைய அந்த நல்ல செய்தியோடு இங்கே வந்துள்ளேன். - என்றார்.

No comments