சர்வதேச விசாரணை முடிந்ததுதான்:சுமந்திரன் விடாப்பிடி!


சர்வதேச விசாரணை முடிவடைந்து விட்டது. அதன் அறிக்கையும் வெளிவந்துவிட்டது. அதனடிப்படையில் தான் ஜெனிவா தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஆகவே அந்த தீர்மானங்களில் இலங்கை அரசாங்கத்தையும் இணங்கச் செய்து அதனைச் செய்விக்கின்ற வேலைகள் தான் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இந்த தீர்மானத்துடனான சர்வதேச மேற்பார்வையை விட்டுவிட்டு சர்வதேச நீதிமன்றத்திற்கு போதற்கான வழி இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.



கால அவகாசம் என்று எவரும் எவருக்கும் ஒரு காலமும் கொடுத்தது கிடையாது. இது சம்மந்தமாக ஊடகங்களுக்கும் தொடர்ச்சியாக மூன்று நான்கு வருடங்களுக்கு விளங்கப்படுத்தியும் விளங்கமாட்டோம் என்று செயற்படுகின்றார்கள். இன்றைக்கும் அப்படியான கேள்வியாகத் தான் இது முன்வைக்கப்படுகிறது. அதே போல சர்வதேச விசாரணை வேண்டாம் கலப்பு நீதிமன்றம் போதும் என்று சொன்னதும் தவறான புரிதல்.



சர்வதேச விசாரணையொன்று நடந்தது. இதைப் பற்றியும் தவறான புரிதல் தொடர்ச்சியாகப் போய்க் கொண்டிருக்கிறது. அதாவது சர்வதேச விசாரணை நடந்து முடிந்து விட்டது என்று சுமந்திரன் சொல்கிறார் என்று பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. உண்மையில் அது நடந்து முடிந்து விட்டது தான். அதன் அறிக்கையொன்று செப்ரெம்பர் 2015 ஆம் ஆண்டு 14 ஆம் திகதி 255 பக்கங்களைக் கொண்ட அறிக்கையாக வெளியிடப்பட்டது.



விசாரணை முடியாமல் அந்த அறிக்கை வெளிவந்திருக்காது. அந்த விசாரணைக்கு பெயர் ஓ,ஐ.எஸ்.எல். ஆங்கியலத்தில் அவ்வாறு தான் அதைச் சொல்லுவார்கள். அதை இளவரசர் செயிட் வெளியிட்டார். 20014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலே ஜெனிவாவிலெ நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலே சர்வதேச விசாரணை நடந்து அதன் அறிக்கை வெளிவந்தது. ஆகவே அந்த விசாரணை முழுமையான சர்வதேச விசாரணை. அதிலே கலப்பு இருக்கவில்லை. உள்நாட்டு விசாரணையாளர்கள் இருக்கவில்லை.




அந்த அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்ற நடவடிக்கைகள் செய்யப்பட வேண்டும். நீதிமன்றத்திற்கு முன்பாக கொண்டு வரப்பட வேண்டும். அது எப்படியான ஒரு பொறிமுறையாக இருக்க வேண்டும் என்பதிலே தான்இந்தக் கலப்பு நீதிமன்றம் என்ற ஒன்று வந்தது. அது கடந்த 2015 ஆம் ஆண்டு அதே நேரத்திலே அதாவது அவருடைய அறிக்கை 16 ஆம் திகதி வெளிவந்தது.  ஒக்ரோபர் 1 ஆம் திகதி தீர்மானத்திலே இந்தக் கலப்புநீதி மன்றம் என்ற சொல் பாவிக்கப்படா விட்டாலும் ஒரு கலப்பு நீதிமன்றப் பொறிமுறை உள்ளடக்கப்பட்டது.



அதற்கு உதாரணம் ஒரு நாட்டிலே சிலரைக் குற்றவாளிகளாகத் தீரத்து அவர் சம்மந்தமாக ஒரு நீதிமன்ற நடவடிக்கை செய்ய வேண்டுமாக இருந்தால் அது அந்த நாட்டுச் சட்டங்களோடு இணங்கிச் செய்ய வேண்டும். தனியாக ஒரு சர்வதேச மட்டத்திலே ஒரு நீதிமன்றத்தை நியமித்துவிட்டால் இலங்கை அதற்கு இணங்கமாட்டாது.



ஏனென்றால் ரோம் சட்டத்திற்கு அவர்கள் கையெழுத்துப் போடவில்லை. ஆகவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் போக முடியாது. இன்னொரு நீதிமன்றத்தை உருவாக்கினால் அவர்கள் அதற்கு இணங்கமாட்டார்கள். ஆகவே இணங்காத ஒரு பொறிமுறையிலெ ஒருதரையும் அவர்கள் மீது தாக்கம் செலுத்துகிற வண்ணமாக ஒரு குற்றவியல் நீதிப் பொறிமுறையைச் செய்ய முடியாது.



அவ்வாறு செய்த தீர்ப்புக் கொடுத்தாலும் அவர் இங்கு சுயாதீனமாகத் தான் இருப்பார். ஆவரைக் கைது செய்ய முடியாது. இந்த நாட்டுப் பொறிமுறையோடு சேர்த்து செய்தால் தான் அது நடைமுறையிலே செயற்படுத்தக் கூடியதாக இருக்கும்.



ஆகவே இவை எல்லாவற்றையும் அனுசரித்து தான் சர்வதேச நாடுகளோடும் இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்த நாடுகளோடும் நாங்கள் இணங்கிப் பேசி (அது சர்வதேச பொறிமுறை என்று பேசிக் கொண்டிருக்கின்ற மற்றவர் அல்ல) இது உண்மையாக நடைமுறைப்படுத்தக் கூடிய விடயமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் அந்த 30.1. என்ற தீர்மானத்திலே சர்வதேச நீதிபதிகளும் வழக்குத் தொடுநர்களும் விசாரணையாளர்களும் சட்டவாளர்களும் என்று நான்கு பகுதியினரைக் குறிப்பிட்டு அவர்கள் பங்குபற்றுகிற ஒரு நீதித்துறை அல்லது நீதிமன்றப் பொறிமுறை என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது சரியான முடிவு. ஆப்படியான ஒன்று தான் நடைபெற்றிருக்க வேண்டும். அந்த நிலைமைக்கு நாங்கள் இன்னமும் வரவில்லை. ஆனால் அந்தத் தீர்மானம் இருக்கிறது.



மேலும் கால அவகாசம் என்று சொல்லப்படுவது 30.1 என்ற தீர்மானம் சம்மந்தமாக 18 மாதங்களிலே இறுதியான ஒரு அறிக்கை கொடக்கப்பட வேண்டுமென்று சொல்லப்பட்டது. அந்த 18 மாதம் மார்ச் 2017 ஆம் ஆண்டு முடிவடைந்தது. அந்த அறிக்கையோடு விசயம் முடிந்திருந்தால் அதற்குப் பிறகு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு இந்த தீர்மானம் சம்மந்தமாகவும் இலங்கை சம்மந்தமாகவும் மேற்பார்பார்வை செய்வதற்கு எந்தவிதமான ஆணையும் இருந்திருக்காது.



ஒரு தீர்மானம் ஒன்று நிறைவேற்றி அதற்கு ஒரு காலத்தைக் கொடுத்தால் தான் அந்தக் காலத்திலே அவர் அதிலே செயற்படலாம். ஆகவே 18 மாதம் முடிவடையும் போது அதனோடு விசயம் முடிந்திருந்தால் அதுக்குப் பிறகு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிர்கர் அலுவலகம் இது சம்மந்தமாக ஏதும் செய்திரக்க முடியாது. ஆகையினால் தான் 34.1 என்கின்ற இன்னொரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்கள்.



அந்தத் தீர்மானத்தின் நோக்கம் என்ன என்றால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்தின் உயர்ஸ்தானிகருடைய மேற்பார்வையை நீடிக்கிற தீர்மானம் தான் அது. சுர்வதேச மேற்பார்வையை நீடிக்கிற தீர்மானம் அது அத்தியாவசியமான தீர்மானம். அதுக்கு நாங்கள் நாடுகளுடைய ஆதரவைக் கேட்டோம். அது நிறைவேற்றப்பட வேண்டுமென்று சொன்னோம். இல்லையென்று சொன்னால் அதற்குப் பிறகு எந்தவித சர்வதேச மேற்பார்வையும் இருந்திருக்காது. அதைத் தான் பொய்யாக கால அவகாசம் கொடுக்கிறொம் கால அவகாசம் கொடுக்கிறோம் என்று பொய்ப் பரப்புரைகளைச் செய்து ஊடகங்களும் இன்றைக்கு வரைக்கும் அதே பொய்ச் சொற்களை பாவித்துக் கொண்டிருக்கிறீர்கள்.



34.1 இரண்டு வருட காலத்திற்குப் பிறகு ஒரு அறிக்கையை உயர்ஸ்தானிகர் கொடுக்க வேண்டுமென்று சொன்னது. 2019 இல் மார்ச் மாதத்தில் அது வந்த போது இன்னமும் இலங்கை அரசாங்கம் முழுமையாக எதனையும் செய்து முடித்திருக்கவில்லை. ஆகவே அது செய்த முடிக்கிற வரைக்கும் சர்வதேச மேற்பார்வை நீடிக்கப்பட வேண்டுமென்பதற்காக 40.1 என்கின்ற இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



இந்த ஒவ்வொரு தீர்மானத்தையும் நிறைவேற்றுவது இலகுவான விடயமல்ல. உறுப்பு நாடுகளுடன் முதலில் பேச வேண்டும். இலங்கை அரசாங்கத்தோடு இருக்கின்ற அந்த நாடுகளுடனும் பேச வேண்டும். ஒவ்வொரு மார்ச் பெப்ரவரிக்கு முன்னனர் னிவாவிற்குச் சென்று அந்த நாடகளுடன் நான் பேசியிரக்கிறேன். அதிலெ இருந்து தான் இந்தத் தீர்மானங்கள் உருவாக்கப்படுகின்றன. ஏன் அதை நாங்கள் செய்கின்றொம் என்றால் சர்வதேச பிடி விடுபடக் கூடாதென்பதற்காகத் தான். சர்வதேச பிடி தொடர்ந்து நீடிக்க வேண்டுமென்பதற்காகத் தான். சர்வதேச மேற்பார்வை நீடிக்க வேண்டுமென்பதற்காக தான். அதனால் தான் 40.1 என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அது 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இறுதி அறிக்கை கொடுக்கப்பட வேண்டும்.



ஆகவே கால அவகாசம் கொடுத்தது என்பது முழுக்க முழுக்க ஒரு பொய்யான பரப்புரை. குலப்பு நீதிமன்றத்திற்கு நாங்கள் இதனைக் குறைத்து விட்டோம் என்று சொல்லுவதும் தவறான ஒரு விளக்கம். கலப்பு நீதிமன்றம் மூலமாகத் தான் நடைமுறைப்படுத்தக் கூடிய செய்கைகளைச் செய்யலாம். இந்த ஒவ்வொரு தடவையும் அந்த தீர்மானத்தின் காலம் முடிவடைகிற பொழுது இன்னொரு தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலமாகத் தான் சர்வதேச மேற்பார்வையை நாங்கள் நீடிக்கலாம்.



மேலும் இலங்கை அரசாங்கம் செய்ய மாட்டார்கள் செய்கிற நோக்கமும் இல்லை என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிந்த ஒரு விசயம். ஆனால் இறைமையுள்ள ஒரு நாட்டில் இதனைச் செய்த முடிப்பதற்கு அந்த நாட்டின் மீது அழுத்தத்தைச் செலுத்தி அந்த நாட்டைக் கொண்டு செய்விக்க வேண்டிய நிறைய விடயங்கள் இரக்கின்றன. அதன் பிரதிபலனாகத் தான் சில சில விடயங்கள் நடந்திருக்கின்றன.



காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்கின்ற சட்டம் இயற்றப்பட்டதும் அப்படியாகத் தான். ஆனால் அது இன்னமும் சரியாக நடைமுறையில் வரவில்லை என்பது இன்னொரு விடயம். அதை அமுல்ப்படுத்த வேண்டும். ஆனால் எந்தவொரு நாடும் தன் படைத் தரப்பினரை தானே குற்றவாளியாக்குகின்ற செயற்பாட்டிற்குச் செல்லாது. ஆதற்கான அழுத்தம் இருக்க வேண்டும்.



 அவ்வாறு இருந்தால் அதனை செய்ய வைக்கலாம். அந்த வேலையைத் தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறொம். இலங்கையைக் கொண்டு இதற்கு இணங்கப் பண்ணி பல விசயங்களைச் செய்ய வேண்டும்.



ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஒரு நாட்டைக் கட்டுப்படுத்துகிற தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது. அது பாதுகாப்பு சபை மட்டும் தான் நிறைவேற்றலாம். ஆகவே இந்தப் பொறிமுறையிலே  அழுத்தங்களை உபயோகித்து இலங்கையை இணங்கப் பண்ணி 2015 நவம்பர் 1 ஆம் திகதி செய்தது இலங்கையை இணங்கப்பண்ணி ஆனபடியினால் தான் மூன்று தடவைகள் இப்பொழுது அதாவது 30.1, 34.1, 40.1 ஆகிய தீர்மானங்கள் இலங்கையின் இணை அனுசரணையோடு தான் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இணங்கியிருக்கின்றது. அவ்வாறு இணங்கியிரக்கிற காரணத்தினாலே சில சில விசயங்களைச் செய்கிறார்கள். பல விசயங்களைச் செய்யவில்லை.



ஆனால் செய்ய வைக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அதனை நாங்கள் செய்கிறோம். அதை மீறி இவர்கள் செய்யவில்லை என்று சொல்லிட்டு அடுத்தது என்ன செய்யலாம் என்று கூக்குரலிடுபவர்களிடம் கேட்டால் அவர்களிடம் எந்தப் பதிலும் இல்லை. சர்வதேச நீதிமன்றத்திற்குப் போக வேண்டுமென்று சொல்கிறார்கள். சர்வதேச நீதிமன்றத்திற்குப் போறதற்கு இப்ப வழி இல்லை. கையில் இருக்கிற பொறிமுறையை தொப்பென்று போட்டுவிட்டு செய்ய மடியாத ஒன்றை செய்வோம் என்று அவர்கள் சொல்லுவது எந்தவிதத்திலும் எங்களுடைய மக்களுக்கு நியாயமான ஒரு விடயமல்ல என்றார்.

No comments