சீனாவிலிருந்து மாணவர்களை அழைத்துவருவதில் சிக்கல்?


கொரோனா வைரஸ் பரவிச் செல்லும் சீனாவின் வூஹான்  நகருக்கு உள்நுழையவோ அங்கிருந்து எவரும் வெளியே வருவதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் இதனால் அங்கிருக்கும் 30 மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வருவது முடியாமல் இருப்பதாக சர்வதேச ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

எனினும் அங்கிருக்கும் இலங்கை மாணவர்களின் சுகாதார நிலை, உணவு, ஏனையத் தேவைகள் குறித்து  பீஜிங் நகரிலுள்ள இலங்கைத் தூதுவராலயம் ஊடாகவும் அந்நாட்டின் அதிகாரிகள்  தொடர்ந்தும் அவதானித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே சீனாவில் உயர்கல்வியைத் தொடரும் மாணவர்கள் 176 பேர் நேற்று (28) இரவு நாட்டுக்கு புறப்பட்டதாக அந்நாட்டின் இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், 484 மாணவர்களை நாட்டுக்கு அனுப்புவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சீனாவுக்கான இலங்கையின் பதில் தூதுவர் கே. யோகநாதன் கூறியுள்ளார்.

இதேவேளை, தடைகள் விதிக்கப்பட்டுள்ள வுஹான் நகரிலுள்ள இலங்கை மாணவர்களை அங்கிருந்து அழைத்துவருவதற்கு, சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சீனாவுக்கான இலங்கையின் பதில் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments