தமிழருக்கு அபிவிருத்தி அதிகாரம் அவசியம்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் மக்களுக்கு மாற்றம் என்பது கட்டாயமானதென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் சிவசக்தி ஆனந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த நான்கரை வருடமாக தமிழ் மக்களினுடைய பிரதிநிதிகள் என்ன செய்தார்கள் என்பதை தமிழ் மக்கள் அறிவார்கள். எனவே ஒரு மாற்றம் என்பது தமிழ் மக்களுக்கு நிச்சயமான ஒரு தேவை.
வடக்கு- கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திகள் முன்னெடுத்து செல்லப்பட வேண்டும் என்பது ஒரு விடயம்.
அதேநேரம் நீண்டகாலமாக மக்கள் போராடி உயிர் தியாகம் செய்திருக்கின்றார்கள். அந்த உயிர் தியாகத்தின் முக்கிய நோக்கம் இந்த மண்ணில் தமிழ் மக்களினுடைய இருப்பு பாதுகாக்கப்பட வேண்டும், மொழி பாதுக்காக்கப்பட வேண்டும், கலாசாரம், பண்பாடுகள், நிலம் பாதுகாக்கப்பட வேண்டும் அந்த தேவைகளுக்காகத்தான் இந்த நீண்ட போராட்டம் நடைபெற்றது.
அந்தக் காரணங்களுக்காகத்தான் இந்த மண்ணில் பல இலட்சம் மக்கள் உயிர் நீத்திருக்கின்றார்கள் பல்லாயிரம்கோடி பெறுமதியான சொத்துக்களை நாம் இழந்திருக்கின்றோம். இதற்காக ஒரு தலைமுறையே போராடி இருக்கின்றது.
அந்தவகையில் தமிழ் மக்களுக்கு ஒரு கௌரவமான தீர்வு என்பது முக்கியம். எதிர்காலத்தில் தங்களது தலைவிதியை தாங்களே தீர்மானிக்க கூடிய வகையில் தங்களது எதிர்காலத்தை தாங்களே திட்டமிடக் கூடிய வகையில் தங்கள் அபிவிருத்தி முயற்சிகளை தாங்களே ஏற்படுத்தக் கூடிய வகையில் அவர்களுக்கு அதிகாரங்கள் அவசியம்.

No comments