தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்

தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்வரை எமது இனத்தின் போராட்டம் தொடரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எத்தனை தடைகள் வந்தாலும் அதைத் தகர்த்தெறிந்து போராடுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொங்கல் விழா, திருகோணமலை நகராட்சி மன்ற நகர மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “எமது போராட்டத்தை தோற்கடிப்பதற்காக பலர் முயற்சி செய்தபோதும் அது இன்னும் பன்மடங்கு பலத்துடன் எமது மக்களின் ஆணையுடன் முன்னெடுக்கப்பட்டே வருகின்றது.
இந்த ஒற்றுமை எமது மக்களுக்கான நிரந்தரத் தீர்வு கிட்டும் வரை நிலைத்திருக்க வேண்டும். இலங்கை தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் மக்களின் ஜனநாயக முடிவைத்தான் நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
அதனடிப்படையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒருமித்த குரலில் எவருக்கும் அடிபணியாது செயற்பட்டு வருவதனால் இன்று சர்வதேச சமுகமும் எம்மை அங்கீகரித்து எமது மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு வழங்க வேண்டும் என அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.
எமது தீர்வு நோக்கிய பயணம் சிறப்பாகவே நகர்ந்து சென்றது. பெரும்பான்மையின மக்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்ப நிலையே இந்த ஆட்சி மாற்றத்திற்குக் காரணமாகும்.
இருப்பினும் நாம் எமக்கான தீர்வு கிட்டும்வரை உறுதியாக செயற்பட்டு வருகின்றோம். அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு கூறிய விடயங்களை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

No comments