யாழில் பழிவாங்க துடிக்கும் இராணுவம்

இராணுவச் சிப்பாயைத் தாக்கியவரும் அவரது சகோதரனும் தலைமறைவாகி இருந்த நிலையில் வீடொன்றில் மறைந்து இருந்த சகோதரன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரிக்கு அண்மையாகவுள்ள எவரும் வசிக்காத வீடொன்றில் சந்தேகநபர், நண்பர்களுடன் இருந்த வேளை அந்த வீட்டை நேற்று (23) பிற்பகல் இராணுவத்தினர் சுற்றிவளைத்து அவரைக் கைது செய்தனர் என்றும் பொலிஸார் கூறினர்.
வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் பகுதி கடந்த 15ம் திகதி இராணுவச் சிப்பாய் ஒருவர் பொது மகனால் தாக்கப்பட்டார். மறுநாள் 16ம் திகதி முதல் குறித்த நபரை தேடி இராணுவத்தினர் சுற்றிவளைப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீதியைக் கடக்க முற்பட்ட சிறுமி ஒருவரை மோதி விபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தி வந்தார் என இராணுவத்தினர் நபர் ஒருவரை கண்டித்தனர்.
அதன்போது அந்த நபரின் உறவினர்கள் கூடியதால் துணிவடைந்த அவர் இராணுவச் சிப்பாயைத் தாக்கினார் என்று தெரிவிக்கப்பட்டது. அத்துடன், இராணுவச் சிப்பாயும் அந்த நபரைத் தாக்கியிருந்தார்.
சிப்பாயைத் தாக்கிவிட்டு அனைவரும் அந்த இடத்திலிருந்து தப்பித்தனர். இந்நிலையில் மறுநாள் அதிகாலை நால்வரை இராணுவத்தினர் கைது செய்தனர்.
எனினும் இராணுவச் சிப்பாயைத் தாக்கியவரும் அவரது சகோதரனும் கைது செய்யப்படாததால் இராணுவத்தினரின் தொடர் தேடுதல் நடவடிக்கை கடந்த ஒரு வாரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே தாக்கிய சந்தேக நபரின் சகோதரரை சுற்றிவளைப்பின் மூலம் இராணுவத்தினர் கைது செய்திருந்தனர். அவர் பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதேவேளை தேடப்படும் சந்தேக நபரான இராணுவச் சிப்பாய் தாக்கிய குறித்த நபரை தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

No comments