மீண்டும் பொங்கு தமிழ்?


பொங்குதமிழ் நிகழ்வு நடைபெற்று இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவடைகின்றது. எனினும் இன்னமும் சிங்கள பௌத்த பேரினவாத அடக்குமுறைக்குள் சிக்குண்டு எமது தேசத்தின் தாங்குதூண்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இவ் அழிப்பு தொடர்வதனை நாம் அனுமதிக்க முடியாது. எமது பல்கலைக்கழகம் கடந்தகாலத்தில் மேற்கொண்ட வரலாற்றுக் கடைமையை ஜனநாயக வழியில் தொடர்ந்து முன்னெடுப்போம் எனக் உறுதியெடுக்கின்றோம் என யாழ் பல்கலைகழக மாணவர்களால் அறிவித்துள்ளனர்.

பொங்கு தமிழ் நிகழ்வின் 19வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, யாழ் பல்கலைகழக மாணவர்கள் வெளியிட்டுள்ள பிரகடனத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் மாபெரும் பொங்குதமிழ் நிகழ்வொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

ஈழத் தமிழ் மக்களின் சுதந்திர தாயகத்துக்கான அடிப்படை அபிலாஷைகளையும் நியாயங்களையும் – சர்வதேசத்துக்கு ஒரே குரலில் தமிழ் மக்கள் வெளிப்படுத்திய தளமாகவும் – சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புக்கு உட்பட்டிருந்த தமிழரின் மரபுவழித் தாயகமும், அதனால் சிதைக்கப்பட்டிருக்கும் தனன்னாட்சி உரிமையையும் வேண்டிநின்ற தமிழ்மக்கள் – தமிழ் தேசியத்தின்பால், தாம்; கொண்டுள்ள ஆழமான விடுதலை உணர்வை வெளிக்கொணர்வதற்கும், வலியுறுத்துவதற்குமாக 2001.01.17 இல் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் – மிகக் கொடூரமான இராணுவ அடக்குமுறைக்கு மத்தியிலும் யாழ் குடாநாட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி யாழ் பல்கலைக்கழகத்தில் மக்கள் பேரெழுச்சியாக திரண்ட நிகழ்வே 'பொங்கு தமிழ்' ஆகும்.

இதனைத் தொடர்ந்து – ஈழத்தின் அனைத்து மாவட்டங்களிலும், – புகலிட தேசங்களிலும் பொங்கு தமிழாய் எம் மக்கள் விடுதலைக்காய் பேரெழுச்சி கொண்டனர்.

இப்புனித நாளில் இலங்கை அரசினால் கடந்த ஆட்சியில் தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய ஒற்றையாட்சிக்கான இடைக்கால அறிக்கையை நிராகரித்துள்ளதாகவும் மாணவர்கள் அறிவித்துள்ளனர். 

No comments