மைதானக் காணிக்காக போராட்டம்!

பாடசாலை விளையாட்டு மைதானத்தை பாதுகாக்குமாறு கோரி மன்னார் – மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட கருங்கண்டல் மகா வித்தியாலய மாணவர்கள் இன்று (13) காலை குறித்த விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
தற்போது குறித்த பாடசாலையில் காணப்படும் விளையாட்டு மைதானம் சுமார் 60 வருடங்களுக்கு மேலாக காணப்படுகிறது.
இந்த நிலையில் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் குறித்த விளையாட்டு மைதான பகுதியில் விளையாட்டுக்கழகம் ஒன்றிற்கு இடம் வழங்கப்பட்டு கட்டடம் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது மடு வலயக்கல்விப்பணிப்பாளர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர் தனித்தனியாக தமது கோரிக்கை அடங்கிய மகஜரை வலயக்கல்விப் பணிப்பாளரிடம் கையளித்தனர்.
இதனையடுத்து குறித்த பிரச்சினை தொடர்பாக துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் மாணவர்களுக்கு உறுதியளித்தார்.

No comments