இந்தியாவிடம் தீர்வை கேட்பதில் உடன்பாடில்லை

தமிழர் பிரச்சினைக்கு தீர்வை இந்தியா தர வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. தீர்வு எம்மிடமே உள்ளது. எமது பிரச்சினைகளை நாம் ஒன்றுபட்டு தீர்க்க வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (14) தமிழ் ஊடகங்களின் தலைமை செய்தி பொறுப்பாளர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடிய போது தெரிவித்தார்.

மேலும்,

தமிழ் ஊடகங்கள் மிகவும் பொறுப்பாக செயற்பட வேண்டும். அரசையும் மக்களையும் ஊடகங்கள் விரோதப்படுத்தக் கூடாது. ஊடகங்கள் உண்மையான விமர்சனங்களை வெளிக்கொணர வேண்டும். தமிழ் மக்கள் எமக்கு வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் அவர்களுக்கான எமது சேவைகள் தொடரும்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஆராயப்படுகிறது. இது தொடர்பில் அறிக்கையொன்று நீதியமைச்சிடம் கோரப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆராயப்படும். தடுத்து வைக்கப்பட்டுள்ள சிலருக்கு பாரதூரமான குற்றங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் நாங்கள் அதனையும் ஆராய்வோம்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரவையில் இன்று பேசப்படவுள்ளது. ஏற்கனவே ஜனாதிபதி அது தொடர்பில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். விரைவில் அது தொடர்பில் நல்ல பதில் அறிவிக்கப்படும். கம்பனிகளுடனும் இதுபற்றி பேசப்பட்டுள்ளது.

தமிழில் தேசிய கீதம் பாடக் கூடாது என்று எந்த தடையும் அரசு விதிக்கவில்லை. அரசில் உள்ள கூட்டணி கட்சித் தலைவர்கள் யாரும் அது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தால் அது அவர்களின் கருத்தாக இருக்குமே தவிர அது அரசின் கருத்தாக இருக்காது. அப்படியொரு நிலைப்பாட்டை அரசு எடுக்கவில்லை.

ஆனால் சிங்கப்பூர், கனடா, இந்தியா போன்ற நாடுகளை போல தேசிய கீதம் ஒரு மொழியில் இருக்கலாம். அதேசமயம் இங்கு நான் ஒரு தமிழ் பாடசாலைக்கு போனால் அங்கு தமிழில் தேசிய கீதம் பாடுகிறார்கள். தென்பகுதியில் நிகழ்வுகளுக்கு சென்றால் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்படுகிறது. பிரதேச ரீதியாக இவை அமுலில் உள்ளன. ஆனால் யாரும் அதனை தடை செய்யவில்லை. தேசிய கீதம் தமிழில் பாட வேண்டுமென சொல்லப்படுவது அரசியல் தேவைகளுக்காகவே.

இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை குறித்து இந்திய விஜயத்தின்போது நான் பேசவுள்ளேன். அதேசமயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இம்மாத இறுதியில் இதுபற்றி பேச்சு நடத்தவுள்ளார். உண்மையில் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பால் இலங்கை மீனவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதுபற்றி பேச்சு நடத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். - என்றார்.

No comments