100 ஆண்டுகளுக்குப் பிறகு,உலகத் தமிழ் இசை மாநாடு!

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் மதுரை உலகத் தமிழ்ச் சங்கமும் இணைந்து முதலாவது உலகத் தமிழ் இசை மாநாட்டை மதுரையில் நடத்தின.
100 ஆண்டுகளுக்குப் பிறகு உலக அளவில் நடைபெறும் முதல் தமிழ் இசை மாநாடு என்பது இந்த மாநாட்டின் சிறப்பு. மூன்று இணை அமர்வுகளாக நடத்தப்பட்ட மாநாட்டில், ஒரு அரங்கத்தில் பன்னாட்டுத் தமிழிசைக் கலைஞர்கள் இசை நிகழ்ச்சிகளில் தங்கள் பங்களிப்பைச் செலுத்தினர். மதுரை இசைக் கல்லூரி குழுவினரின் இசைக் கச்சேரியோடு தொடங்கியது இசை அரங்கம்.
இன்னொரு அரங்கத்தில் பன்னாட்டு தமிழிசை ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை அளித்தனர். 25 அமர்வுகளில் ஆய்வுக்கட்டுரைகள் அளிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஆய்வாளர்கள் 500-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பியிருந்தனர் அவற்றுள் மாநாட்டு அறிஞர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட 250 கட்டுரைகள் தொகுக்கப்பட்டு1800 பக்கங்களில் நூல்களாக 3 தொகுதிகள் இந்த மாநாட்டில் வெளியிடப்பட்டன.

அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், சீனா, மொரிஷியஸ், ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து தமிழ் இசைக் கலைஞர்களும் இசை ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.
மாநாட்டின் தொடக்க விழாவிலும் நிறைவு விழாவிலும் இசைத் துறையில் சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கும், மாநாட்டுக்காகப் பல்வேறு வகையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த மாநாட்டில் தமிழிசை வேந்தா் கோ.ப. நல்லசிவம் குழுவினரின் திருமுறைப் பண்ணிசை; பாபுவிநாயகம், உலகத் தமிழிசை ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சிக் கழகத்தின் பண்ணிசைப் பாடல்கள்; சின்னமனூா் அ. சித்ரா குழுவினரின் சிலப்பதிகார நடனம்; இலங்காபுரி அவைக்காற்றுக் கலையகத்தின் ‘தமிழா் நாமும் நவரச வாழ்வும்’ இசை நடனம்; சேலம் பிரபந்தமாலா இசைக் குழுவினரின் திவ்யப்பிரபந்த இன்னிசை; இலங்கை தியாகராஜா் கலைக்கோயில் குழுவினரின் திரிகோணமலை வில்லூன்றிக் குறவஞ்சி தமிழிசை நாட்டிய நாடகம் ஆகிய நிகழ்ச்சிகள் மாநாட்டில் நடைபெற்றது

No comments