சிறுமியை துஷ்பிரயோகம் செய்த அர்ச்சருக்கு பிணை மறுப்பு

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் தரம் நான்கில் பயிலும் ஒன்பது வயதுச் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வழக்கில் ஆலய அர்ச்சகர் மற்றும் சிறுமியின் சித்தப்பா ஆகியோரின் விளக்கமறியயலை நீடித்து இன்று (12) பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பாதிக்கப்பட்ட சிறுமி சார்பாக சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷும், அர்ச்சகர் சார்பில் சட்டத்தரணி ஸ்ரீகாந்தாவும் ஆஜராகினார்கள். சிறுமியின் சித்தப்பா சார்பில் எந்தவொரு சட்டத்தரணியும் ஆஜராகவில்லை.

இதன்படி இன்று பருத்தித்துறை நீதிமன்றில் சந்தேக நபர்கள் இருவரும் முற்படுத்தப்பட்டனர். இதன்போது முதலாவது சந்தேக நபரான அர்ச்சகர் சார்பில் மூத்த சட்டத்தரணி ஸ்ரீகாந்தா பிணை விண்ணப்பத்தை சமர்ப்பணம் செய்து தெரிவிக்கையில்,

"அர்ச்சகர் 72 வயதுடையவர். அவர் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக பொலிஸாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தல் சிறுமி தெரிவிக்கவில்லை. எனவே அர்ச்சகரை பிணையில் விடுவிக்க வேண்டும் என்று மன்றுரைத்தார்.

இதனையடுத்து, "சிறுமி ஆலய அர்ச்சகரால் 2 வருடம் தொடர்ச்சியாக வன்புணர்வுக்கு உட்படுத்த்பட்டுள்ளார். மக்கள் வழிபடும் ஆலயச் சமூகத்தில் இவ்வாறான சமூகப்பிரள்வு இடம்பெற்றுள்ளமை பாரதூரமான விடயம். இதனை சமூகத்தில் அனுமதிக்க முடியாது. சிறுமி பராயமடையாதவர். அவருக்கு அர்ச்சகரால் தனக்கு இழைக்கப்பட்ட பாதிப்பை விபரிக்க முடியாது. அதனால் தான் சட்ட மருத்துவ அறிக்கையை கோருகின்றோம். பராயமடையாத சிறுவர்களின் காப்பகமாக நீதிமன்றமே உள்ளது. எனவே முதலாவது சந்தேக நபரான அர்ச்சகரும் அவருக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் சித்தபபாவையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க வேண்டும்" என்று சிறுமி சார்பிலான சட்டத்தரணி சுகாஷ் மன்றுரைத்தார்.

இரு தரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த நீதிவான், சந்தேக நபர்கள் சாா்பான பிணை விண்ணப்பத்தை நிராகரித்து அவர்களது விளக்கமறியலை 20ம் திகதிவரை நீடித்தார். அத்துடன் சிறுமியின் சட்ட வைத்திய அறிக்கையையும் அவரது வாக்கு மூலத்தையும் வரும் 20ம் திகதி மன்றில் சமர்ப்பிக்க நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டது.

சம்பவம் -

கடந்த மாதம் 27ம் திகதி குறித்த சிறுமி அலைபேசி ஒன்றை வைத்திருப்பதை சிறுமி படிக்கும் பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் கண்டறிந்தார். இது தொடர்பாக சிறுமியிடம் விசாரித்தபோது வல்வெட்டித்துறை அர்ச்சகர் ஒருவர் தனக்கு அலை பேசியை தந்ததாகவும் அலைபேசி மூலம் பிரசாதம் தர ஆலயம் வருமாறு அழைத்ததாகவும் சிறுமி கூறிய போது இந்தச் சம்பவம் அம்பலமாகியிருந்தது.

இதனையடுத்து இடம்பெற்ற பொலிஸ் விசாரணையில் சிறுமி, அர்ச்சகர் தன்னை ஆலயத்தில் வைத்து துன்புறுத்தியதாகவும் அதிகளவு பணத்தையும் தந்ததாகவும், சித்தப்பா ஒருவரும் தன்னைத் துன்புறுத்துவதாகவும் சிறுமி விசாரணையில் தெரிவித்தார்.

இதன்படி குறித்த அர்ச்சகரும் (72-வயது) சித்தப்பாவும் (50-வயது) கைது செய்யப்பட்டிருந்தனர். மேலும் அர்ச்சகரால் வழங்கப்பட்ட ஒரு தொகை பணத்தையும் சிறுமி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

அவர்கள் இருவரும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் கடந்த 30ம் திகதி முன்னிலைப்படுத்தப்பட்ட போது இருவரையும் இன்று (12) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தது.

No comments