புலி விவகாரம்; சந்துருவின் வழக்கு உயர் நீதிமன்றுக்கு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான அம்சங்களைத் தமது தொலைபேசியில்  வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மலாக்கா அரசு சார்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.சந்துரு (38) மீதான வழக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

‘சொஸ்மா’ எனப்படும் பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012, பிரிவு 13ன் கீழ் வரும் எல்லாக் குற்றங்களும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்திலேயே விசாரிக்கப்பட வேண்டும் என்று துணை அரசாங்க  சட்டத்தரணிகள் வாதிட்டனர்.

இதன்போது சந்துரு சார்பில் முன்னிலையான  சட்டத்தரணி மெல்வின் டே,  தமது கட்சிக்காரர் மீது மலாக்கா அமர்வு நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு விசாரணையில் இருப்பதால் விடுதலைப் புலி விவகாரம் தொடர்பாக அவர் மீது  தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான வழக்கும் அந்த நீதிமன்றத்திலேயே விசாரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

எனினும்  அதை ஏற்க மறுத்த நீதிபதி,  சந்துரு மீதான வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார்.

No comments