யாழ் பல்கலைக்குள் நுழைந்த அதிரடிப்படை

இன்று (08) மாலை இளைஞர்கள் இருவரை விரட்டி வந்த போது அவர்கள் யாழ் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்ததை அடுத்து அதிரடி படையினரும் பொலிஸாரும் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. எனினும் அவர்கள் சில நிமிடங்களில் அங்கிருந்து வெளியேறியுள்னர்.

இதன்போது பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த அதிரடிப் படையினரும் பொலிஸாரும் மாணவர்களை அச்சுறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அதிரடி படையினர் 6 பேர் 3 மோட்டார் சைக்கிள்களிலும் பொலிஸார் இருவர் ஒரு மோட்டார் சைக்கிளிலும் வந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவரை அதிரடிப் படையினரும் பொலிஸாரும் துரத்தி வந்தனர் எனக் கூறப்படுகிறது.

இளைஞர்கள் இருவரும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்ததால் அதிரடிப் படையினரும் பொலிஸாரும் ஆயுதங்களுடன் அவர்களை வளாகத்துக்குள் துரத்திச் சென்றனர். எனினும் துரத்தி வந்த இளைஞர்களைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட அதிரடிப் படையினர் அங்கு கலை நிகழ்வுகளுக்காக நின்றிருந்த மாணவர்களை மிரட்டியுள்ளனர்.

இதனால் அத்துமீறி பல்கலைக்கழகத்துக்குள் ஆயுதங்களுடன் அதிரடிப் நடையினர் நுழைந்தனர் எனவும் அவர்கள் வெளியேறாத வகையில் பிரதான வாயிலை மூடுமாறும் மாணவர்கள் நிர்வாகத்திடம் வலியுறுத்தினர். எனினும் பிரதான வாயில் மூடப்படாத நிலையில் சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் அங்கிருந்து வெளியேறினர்.

இதனால் தம்மை அச்சுறுத்திய அதிரடிப் படையினரை வெளியேற அனுமதித்ததாகவும் அத்துமீறி நுழைந்த அதிரடிப் படையினர் அச்சுறுத்திய சம்பவம் குறித்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பெருமளவு மாணவர்கள் பல்கலைக் கழகத்தின் பிரதான வாயிலில் கூடினார்கள். இதனால் அவ்விடத்தில் சில மணிநேரம் பதற்றமாக சூழல் காணப்பட்டது.

No comments