தீ விபத்தில் வீடுகள் சேதம்

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட வட்டகொடை பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் வீடுகள் சேதமடைந்துள்ளன.

வட்டகொடை யோக்ஸ்போட் தோட்டம் மணிபூர் பிரிவில் 7 வீடுகள் கொண்ட 8ஆம் இலக்க தொடர் லயன் குடியிருப்பில் இன்று (08) காலை 9.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில், ஒரு வீடு தீயினால் முற்றாக எரிந்துள்ளதுடன் மற்றுமொரு வீடு பகுதியளவில் சேதமாகியுள்ளது. இவ்விரு வீடுகளிலும் இருந்த 9 பேர் தற்காலிகமாக யோக்ஸ்போட் கலாசார மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீக்கான காரணம் இதுவரை உறுதி செய்யாத போதிலும் மின் கசிவின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

தீ இடம்பெற்ற தோட்டத்திற்கு உடனடியாக விஜயம் செய்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத் ஆகியோர் சம்பவத்தை பார்வையிட்டதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பரத் அருள்சாமியின் ஊடாக பெற்று கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும், கொட்டகலை பிரதேச சபையினரும் மேற்கொண்டு வருவதாக கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத் தெரிவித்தார்.

No comments