பல்கலைக்கழக மாணவர்களின் நிலைப்பாடு என்ன? இன்று அறிவிப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஒற்றுமை முயற்சி தோல்வியடைந்துள்ள நிலையில், பல்கலைக்கழக மாணவர்கள் தமது நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்கவுள்ளனர்.
ஐந்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தபோதும் ஐந்து கட்சிகளும் தனித்தனியாக தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ள நிலையில், பல்கலைக்கழக மாணவர்கள் தமது நிலைப்பாட்டை இன்று (வியாழக்கிழமை) அறிவிக்கவுள்ளனர்.
தமிழ்த் தேசியப் பாதையில் பயணிக்கும் தமிழ் அரசியல் கட்சிகளை ஓரணியில் திரட்டி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவான நிலைப்பாடொன்றை மெற்கொள்ளும் நோக்கில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல கட்ட சந்திப்புகள் இடம்பெற்றன.
இதனையடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்த்து தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட், தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய 5 கட்சிகள் ஒன்றிணைந்து வடக்கு – கிழக்கு பல்கலை மாணவர்களின் ஒருங்கிணைப்பில், 13 அம்சக் கோரிக்கைளை ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைத்தன.
எனினும் தமிழ் தேசியக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான மூன்று வேட்பாளர்களும் முன்வரவில்லை
அதன் பின்னர் விரும்பியவர்களுக்கு தமிழ் மக்களை வாக்களிக்குமாறு தமிழ் மக்கள் கூட்டணி அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட், ரெலோ என அனைத்து தமிழ் கட்சிகளும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்தன.
அதன் பின்னர் இறுதியாக இன்று காலை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments