பாஜகவுக்கு முன்னதாகவே திருவள்ளுவருக்கு காவி அடித்த தமிழக அரசு!

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து பாஜகவின் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட படம் கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற நிலையில் , மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஒரு புதிய தகவலை வெளியிட்டிருக்கிறார். திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்துவதில் பாஜகவுக்கு முன்னோடியாக தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறைதான் செயல்பட்டிருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார் ஜவாஹிருல்லா.
”அய்யன் திருவள்ளுவருக்கு முதலில் காவி உடை அணிவித்தது தமிழக பள்ளிக் கல்வித் துறை தான். 2019ல் தமிழக அரசு பாடநூல் நிறுவனம் வெளியிட்டுள்ள 12ம் வகுப்பிற்கான பிரெஞ்சு மொழி பாடநூலின் 59ம் பக்கத்தில் அய்யன் திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவித்த படத்தை வெளியிட்டுள்ளார்கள். குருவை மிஞ்சிய சீடர்கள்” என்று அதிமுகவினரைக் குறிப்பிட்டுக் கூறியுள்ளார் ஜவாஹிருல்லா.
பிரெஞ்சு மொழிப் பாடத்தில் இந்த ’காவி வள்ளுவர்’ இடம்பெற்றதால் வெகுஜன கவனத்துக்கு வராமல் போய்விட்டது. அதையே பாஜக எடுத்துப் போட்டவுடன் அனைவரது கவனத்துக்கும் வந்திருக்கிறது.

No comments