கணவர் கொலை செய்ய சொன்னாரா? கிளி சம்பவம் இருவர் கைது

கிளிநொச்சி - கந்தபுரம் பகுதியில் இளம் குடும்பப் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் நேற்று வீட்டில் தனித்திருந்த 9 மாத பச்சிளம் குழந்தையின் தாய் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அக்கராயன் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி கருணாமூர்த்தி வினோத் தலைமையிலான பொலிஸ் குழு தீவிர விசாரணைகளில் ஈடுபட்டனர்.

அந்த விசாரணையின் அடிப்படையில் உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது சகோதரியின் கணவர் ஆகியோரே இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கணவர் வவுனியாவில் மற்றுமொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ள அதேவேளை, குடும்பத்தில் சீதனம் தொடர்பாக பிரச்சினையும் காணப்பட்டது என்றும். இந்த நிலையில் மனைவியை கொலை செய்யுமாறும் 10 இலட்சம் பணம் தருவதாகவும் உயிரிழந்த பெண்ணின் கணவர் தனது மனைவியின் சகோதரியின் கணவரிடம் கூறியதையடுத்து, சம்பவம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பணத்திற்காக குறித்த நபர் அந்த இளம் குடும்பப் பெண்ணை கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சமபவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் சந்தேகநபர்களை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தவுள்ளனர்.

அதேவேளை, உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

No comments