நாங்கள் திருடர்கள் அல்ல

இந்த நாட்டில் 30 வருட காலமாக நடைபெற்றுவந்த யுத்தத்தை நிறுத்தவதாக கூறினேன் அதை இரண்டரை வருடத்திற்குள் யுத்தத்தை நிறுத்தி சமாதானத்தை கொண்டு வந்தேன் என பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து உரையாற்றுகையில், “நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவினால் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மொழியில் ஒன்றும் சிங்கள மொழியில் ஒன்றும் ஆங்கில மொழியில் ஒன்றும் வெவ்வேறாக அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
இது மக்களை ஏமாற்றும் செயலாகும். ஆனால் நாங்கள் வெளியிட்டிருக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மூன்று மொழிகளிலும் ஒரே விதமான தேர்தல் விஞ்ஞாபனமே மக்களுக்கு வழங்கியுள்ளோம். நாங்கள் மக்களை ஏமாற்ற விரும்பவில்லை.
இந்த நாட்டில் விமான நிலையத்தில் நெல் களஞ்சியசாலையை உருவாக்கியது உலக சரித்திரத்திலேயே முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. நாங்கள் அமைத்த விமான நிலையம் தற்பொழுது நெல் களஞ்சியசாலையாக இருக்கின்றது.
அதேபோல நாங்கள் அமைத்த துறைமுகங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யவும் நடவடிக்கையை இந்த அரசாங்கம் எடுத்து வருகின்றது. இந்த அரசாங்கம் எந்தவிதமான மக்களுக்கு பயன்படக்கூடிய அபிவிருத்திகளையும் செய்யவில்லை.
எங்களது காலத்தில் பாதைகளைப் புனரமைத்தோம். அதிவேக பாதைகளை உருவாக்கினோம். கொழும்பிலிருந்து கண்டி வரை அதிவேக பாதை உருவாக்க அடிக்கல் நாங்கள் நாட்டினோம். ஆனால் அந்த பாதையை இன்றுவரை இந்த அரசாங்கம் செய்து முடிக்கவில்லை.
எங்களை திருடர்கள் எனக் கூறிய ஐக்கிய தேசியக் கட்சி இன்று நாட்டில் என்ன செய்துள்ளார்கள்?
அவர்கள் கொள்ளையடித்து நாட்டை சீரழித்து வருகின்றார்கள். நாங்கள் திருடர்கள் அல்ல. பெரிய திருடர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் தான் இருக்கின்றார்கள். இவர்களின் ஆட்சி மீண்டும் தொடருமானால் இலங்கை நாடு மேலும் சீரழிந்து பொருளாதாரத்தில் பின்தள்ளப்படும். எனவே எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வெற்றி பெறச்செய்து நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

No comments