கோத்தாவை கூண்டிலேற்றவேண்டும்:வியாழேந்திரன்!


கோத்தபாய மீது மட்டுமல்ல போர்க்குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென அவரது வெற்றிக்காக பாடுபட்ட தமிழ் தேசியக்ககூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச மீதான குற்றச்சாட்டுக்களை நாங்கள் நிராகரிக்கவில்லை. அது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும். கோத்தபாய ராஜபக்ச மீதான சர்வதேச பொறிமுறைகள் யாவும் முன்னெடுக்கப்பட வேண்டும். அதில் எனக்கு எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லை.கோத்தபாய மீது மட்டுமல்ல போர்க்குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இந்த நிலைப்பாட்டில் துளியளவு கூட மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அந்தக் கருத்திலிருந்து நாங்கள் இப்பொழுதும் பின்வாங்கவில்லை. சஜித் பிறேமதாசாவே சவேந்திரசில்வா மீது கை வைப்பதற்கு எவரையும் அனுமதிக்க மாட்டேன் என தெரிவித்திருந்தார்.

உண்மையில் சிங்களத் தரப்பினரும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துத் தலைவர்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத் தான் இருப்பார்கள். இருக்கிறார்கள்.

ஆனாலும் யாரை ஆதரிதால் எமது மக்களுக்கான பாதுகாப்பு கிடைக்கும் என்பதை ஆராய்ந்ததன் பின்னரே கோத்தபாய ராஜபக்சவை ஆதரித்திருக்கிறோம் என சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments