கோத்தாவை விமர்சித்த பிபிசி; கொழும்பில் கடும் எதிர்ப்பு

"தமிழ் மக்களுக்கு எதிரான இன ஒழிப்புக்கு ஜனாதிபதியாக தெரிவான கோத்தாபய ராஜபக்ஷவே பொறுப்பு கூறக்கூடிய இராணுவத் தலைவர்" என்று செய்தி வெளியிட்ட பிபிசி ஊடகத்திற்கு எதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சுரகிமு ஸ்ரீலங்கா மற்றும் சிங்களே அபி அமைப்பு உள்ளிட்ட நான்கு அமைப்புக்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

இதன்போது அவர்கள் பிரித்தானிய பிரதமருக்காக வழங்கிய கடிதத்தில்,

இலங்கை ஆயுதப் படைகளுக்கும் விடுதலைப் LTTE பயங்கரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் தமிழ் மக்கள் இன ஒழிப்புக்கு கடந்த 17ஆம் திகதி இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவே பொறுப்பு கூறக்கூடிய இராணுவத் தலைவர் என குறித்த செய்திச்சேவை விமர்சித்தமைக்கு நாங்கள் கடும் எதிர்ப்பை தெரிவிக்கின்றோம்.

உண்மையில் இறுதி யுத்தத்தின் போது தமது கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து வெளியேறிய விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி தாக்கினார்கள்.

இதேபோல் இலங்கை ஆயுதப் படைகளின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்களை குறித்த பிரித்தானிய செய்தி நிறுவனம் பல தடவைகள் வெளியிட்டு வந்துள்ளது.

இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையிலான இரு தரப்பு நல்லுறவை பாதுகாக்கும் வகையில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உங்களை வேண்டிக் கொள்கின்றோம் - என்றுள்ளது.

No comments