சஜித் எழுத்து மூலம் உறுதியளித்தால் ஆதரவு

வேலையற்ற பட்டதாரிகளுக்கு எழுத்து மூலம் உறுதி வழங்கினால் பட்டதாரிகள் அனைவரும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிப்போம் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கே.அனிர்தன்  இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நாங்கள் எங்களுடைய உழைப்பில் கஸ்டப்பட்டு பட்டதாரிகளாக இன்று வேலையற்று இருக்கின்றோம்.

2014ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2300பேர் வேலையற்ற பட்டதாரிகள் எங்களுடைய சங்கத்தில் வேலையில்லாமல் இருக்கின்றார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் எங்கள்மீது கரிசனை காட்டாமலும் வேலைவாய்ப்புக்களை தரமறுத்துள்ளார்கள். எங்களுக்கு கடந்த அரசாங்கம் மீது நம்பிக்கை இருக்கவில்லை.

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு தருவதில் நம்பிக்கை இழந்துள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கம்பளையில் நடைபெற்ற கூட்டத்தில் தான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கி பட்டதாரிகளின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக தெரிவித்தார்.

இதனை வேலையற்ற பட்டதாரிகளாகிய நாங்கள் முழுமனதுடன் வரவேற்கின்றோம்” என தெரிவித்தார்.

No comments