இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கர் மனு

இலங்கை அரசாங்கத்திடம் நட்ட ஈடு கோரி அமெரிக்க வைத்தியர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலில் தனது 12 வயது மகள் உயிரிழந்தமைக்கு நட்ட ஈடு வழங்குமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எலெக்சாண்டர் ஏலோ என்ற அமெரிக்க வைத்தியரினாலேயே இவ்வாறு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ உள்ளிட்ட மேலும் இருவரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஈஸ்டர் தாக்குதலின் போது கொழும்பிலுள்ள ஹோட்டல் ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் தனது 12 வயதான மகள் உயிரிழந்ததாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
குண்டு தாக்குதல் நடத்தப்படும் என புலனாய்வு தகவல் கிடைத்திருந்தும் அதனை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமையால் பாரிய அனர்தத்தை எதிர்நோக்க நேரிட்டதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டதாகவும், தனக்கு உரிய நட்டஈட்டை வழங்குமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிடுமாறும் மனுதாரர் உயர் நீதிமன்றத்தை கோரியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலின் போது 250 இற்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்திருந்ததுடன், 300 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments