ஈழத்தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே நியாயம் மறுக்கப்படும் கொடுமை:

ஈழத்தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே நியாயம் மறுக்கப்படும் கொடுமை நடந்தேறுகிறது என்று திருச்சி சிறப்பு முகாமில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மே 17 இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது;

அதில்;- திருச்சி மத்திய சிறைச்சாலையில் எந்தவித வழக்குமில்லாமல் கடந்த ஏழு வருடங்களாக 70க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் சிறப்பு முகாம் என்ற சித்ரவதை முகாமில் தமிழக அரசால் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். தங்கள் மீது எந்தவொரு வழக்குமில்லை பின் ஏன் எங்களை அடைத்து வைத்திருக்கிறீர்கள் என்று நியாயம் கேட்டு இந்த ஏழு வருடங்களில் பல தடவை கோரிக்கைகள் வைத்தும் எதுவும் பலனளிக்காத காரணத்தால், நேற்று 07.11.19 முதல் ’விடுதலை அல்லது சாவு’ என்ற கோரிக்கையுடன் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்திருக்கின்றனர்.

இதை தமிழக காவல்துறை அடக்க நினைத்த பொழுது வேறு வழியின்றி 19பேர் இன்று 08.11.19 தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு  உயிர்போகும் நிலையில் சிறையிலேயே இருப்பதாக தகவல் வருகிறது. மேலும் இவர்களுக்கு இதுவரை எந்த சிகிச்சையும் அளிக்காமல் வேண்டுமென்றே காவல்துறை காலம் கடத்துவதாகவும் செய்திகள் வருகிறது.

ஆகவே தமிழக அரசு உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து அவர்களின் உயிர்களை காப்பாற்ற வேண்டுமெனவும், எந்தவித வழக்குமில்லாமல் ஏழு ஆண்டுகளாக சிறையிலிருக்கும் 70க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனவும் மே பதினேழு கேட்டுக்கொள்கிறது.

No comments