ஞானசார கும்பலை கைது செய்! யாழில் திரண்ட மக்கள்

முல்லைத்தீவு - நீதிமன்ற உத்தரவை மீறி நீராவியடிப் பிள்ளையார் ஆலயக் கேணிப் பகுதியில் தேரரின் உடலை தகனம் செய்த சம்பவத்தை கண்டித்தும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை மற்றும் அவரது குழுவினரை கைது செய்ய வலியுறுத்தியும் யாழ்.நகரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இன்று (05) காலை இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீறி, பௌத்த பிக்குவின் உடல் ஆலய கேணிப் பகுதியில் எரிக்கப்பட்டதை கண்டித்தும்  அடாவடியில் ஈடுபட்ட ஞானசார தேரர் மற்றும் அவரது குழுவினரையும் கைது செய்யவேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

சாதாரண இளைஞர்கள் செய்கின்ற சிறிய குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்படுகின்ற நிலையில் மதத்தை இழிவுப்படுத்திய ஞானசாரர் உள்ளிட்ட ஏனைய பௌத்த பிக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதமைக்கு காரணம் என்னவென இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ரெலோ அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் உட்பட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொது மக்கள் எனப் பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்

மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘சட்டம் ஒழுங்கு யார் கையில்? அரசே பதில் சொல்’, ‘தேசிய சண்டியனான ஞானசார தேரரை கைது செய்’ உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments