நால்வர் கைது; பொலிஸாரால் தாக்கப்பட்டனர்

வவுனியா புளியங்குளம் பொலிஸாரினால் இளைஞர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புளியங்குளம் புரட்சி விளையாட்டரங்கிற்கு அருகில் நேற்று (14) இரவு இளைஞர்கள் தங்களுக்குள் முரண்பட்டுக்கொண்ட நிலையில், போத்தல் ஒன்றினால் ஒருவர் தனது கையை தாக்கி காயப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் காயமடைந்தவரை புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் ஏனைய இளைஞர்கள் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை மேற்கொண்ட வைத்தியருக்கும், குறித்த இளைஞர்களிற்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. குறித்த முரண்பாடு தொடர்பாக புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு அளிக்கபட்டது.

இந்த முறைப்பாட்டுக்கு அமைய வைத்தியசாலைக்கு சென்ற பொலிஸார், அங்கு நின்ற இளைஞர்கள் இருவரை கைதுசெய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதுடன்  மேலும் இருவர் உட்பட  நான்கு பேரை கைது செய்திருந்தனர்.

இதன்போது கைது செய்யபட்டவர்களை பார்பதற்காக இளைஞர்களின் உறவினர்கள் புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோது, பொலிஸார் தம்மை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை எனவும் எமது பிள்ளைகளை பொலிஸார் கடுமையாக தாக்கியதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தினர்.

கைது செய்யபட்டவர்கள் மது போதையில் இருந்ததாக பொலிஸார் கூறுகின்றனர் அப்படியானால் மது போதையில் நிற்பவர்களை அழைத்து சென்று பொலிஸார் கடுமையாக தாக்குவது சரியா எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதனால் சிறிது  நேரம் குறித்த பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

No comments