கோத்தா பின்னால் ஏன் அணிவகுப்பு?


கோத்தபாயா ராஜபக்சே பாதுகாப்பு செயலராக இருந்த பொது டக்ளஸ் தேவானந்தா , கருணா ,பிள்ளையான் , புளொட் போன்ற ஆயுத குழுக்கள் தங்களுக்கான நிதியை தேடி கொள்ள வடக்கு கிழக்கு மற்றும் தெற்கு என இலங்கை முழுவதும் தமிழ் வர்த்தகர்களை கடத்தி அச்சுறுத்தி பணம் பறிக்க அனுமதி அளித்து இருந்தார். கோத்தபாயா ராஜபக்சே அனுமதி அளிக்கும் வரை தமிழ் ஒட்டுக்குழுக்கள் முழுமையாக பாதுகாப்பு அமைச்சின் மாத கொடுப்பனவில் மட்டுமே தங்கி இருந்தன.

குறிப்பாக தெற்கில் இருந்த தமிழ் வர்த்தகர்கள், மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்த தமிழர்களை கடத்திப் பணம் பறிப்பதில் டக்ளஸ் கருணா கும்பல்களை விட பிள்ளையான் கும்பல் மும்மரமாக இருந்தது பிள்ளையான் கும்பலில் பணம் பறிக்கும் வேலையை செய்த பிரதானமான ஆள் “தரன்”. 2006 ஆரம்பம் தொடக்கம் பிள்ளையான் கும்பல் பணத்துக்காக பலரையும் இலங்கை ராணுவ புலனாய்வின் ஒத்துழைப்போடு கடத்தி வந்தனர் .
கொழும்பு , கொழும்பு புறநகர் பகுதிகள் மற்றும் தெற்கில் இருந்து கடத்தப்பட்டு பணம் பறிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அனைவரையும் பிள்ளையான் கும்பல் கொண்டு சென்று தடுத்து வைத்த இடம் கபறண இராணுவ முகாமாகும். இராணுவ முகாமினுள் சிறைச் சாலை ஒன்று சிறிய அளவில் இருந்தது . பணம் பறிக்கப்பட்ட பின்னர் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்று முன்னரே தீர்மானிக்கப்பட்டால் அவரை நேராக கபறண இராணுவ முகாம் சிறைச்சாலைக்குக் கொண்டு சென்றனர் பிள்ளையான் கும்பல். பெரும்பாலும் இராணுவமும் பிள்ளையான் கும்பலும் சேர்ந்துதான் பறிக்கப்பட்ட பணத்தைப் பங்கு போட்டனர். கடத்திய சில வர்த்தகர்களை மட்டும் பிள்ளையான் கும்பல் வெலிகந்த ராணுவ முகாமுக்கு கொண்டு சென்றனர்.

கடத்தப்பட்டவர்களை தடுத்து வைத்து கொண்டு தொலைபேசியில் அவர்களது உறவினர்களுடன் வைத்துப் பேரம் பேசுவார்கள் . கடத்தப்பட்டவரின் கைத் தொலைபேசியைத்தான் இதற்குப் பயன்படுத்துவர். கடத்தப்பட்டவரது உறவினர்கள் சிலர் பொலிசில் முறையிடுவர். பொலிசில் முறையிட்டால் உடனே அதுபற்றி பிள்ளையானுக்குத் கும்பலுக்கு தகவல் வந்தடையும். பணத்தைப் பெற்றுக்கொண்டு அவரை சுட்டுக் கொன்றுவிடுவர். கபறண இராணுவ முகாமினுள் கடத்தப்பட்ட வர்த்தகர்கள் மட்டுமன்றி ராஜபக்சே சகோதரர்களுக்கு வேண்டப்படாத பத்திரிகையாளர்கள் உட்பட்ட சிங்களவர்கள் உடபட பலர் கொண்டு வரப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை ராணுவ புலனாய்வு துறையுடனான தொடர்பாடலில் ஏற்பட்ட கோளாறு ஒன்று காரணமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேயின் நண்பரான சிங்கள வர்த்தகர் ஒருவரை கூட பிள்ளையான் கும்பல் கடத்தி காசு பறித்துக் கொலை செய்தனர் கொழும்பிலிருந்து வெலிகந்தைக்கு தனது சொந்த வேலையின் நிமித்தம் சிவப்புக் கலர் வாகனம் ஒன்றில் பயணமானார் அந்தச் சிங்களவர். பிள்ளையான் குழுவினர் அந்தச் சிங்களவரை வாகனத்துடன் மடக்கிப் பிடித்து, அவரை தனது முகாமான வெலிகந்தை முகாமுக்குக் கொண்டு சென்றனர்.இந்தக் கடத்தலுக்குத் தலைமை தாங்கியது இனிய பாரதி. இரண்டு நாட்களாக அவரைச் சித்திரவதை செய்து அவரிடத்திருந்து இலங்கைப் பணத்தில் ரூபா 8 கோடி பெற்றுக்கொண்டனர். மகிந்த ராஜபக்சே தனது நண்பர் கடத்தப்பட்டது பற்றி அதிகாரிகளிடத்துக் கேட்டுள்ளார். யாருக்கும் தெரியாது என்று கூறினர். ராஜபக்சே பிள்ளையானிடத்து விசாரிக்கும்படி கேட்டுள்ளார். அவர் மறுத்ததும் அந்தக் கடத்தல் புலிகளின் தலையில் போடப்பட்டது. அவர் பயணம் செய்த சிவப்புக் கலர் வாகனத்தை கருப்பளையில் உள்ள குளத்தின் சேற்றுக்குள் மூழ்கடித்துவிட்டனர். இக்கடத்தல் சம்பவத்தை வெலிகந்தை உளவுப் பிரிவைச் சேர்ந்த எஸ்.எல்.ஏ மற்றும் தாகீர் என்ற பொலிஸார் மோப்பம் பிடித்துக் கண்டுபிடித்துவிட்டனர். அவர்களுக்கு இக்கடத்தல் விடயம் முழுமையாக தெரியும் என்பதால், பிள்ளையான் நேரடியாக கடத்தப்பட்டவரிடமிருந்து வாங்கிய பணத்தில் பெரும் தொகையை அந்த பொலிசாருக்குக் கொடுத்து, இச்சம்பவத்தை மறைத்துவிட்டார்.

இவ்வாறு தமிழ் ஆயுத கும்பல்களை அப்பாவி தமிழ் வர்த்தகர்கள் உட்பட்ட தமிழ் மக்கள் மீது ஏவி விட்டு தங்கள் காரியம் சாதித்தார்கள் ராஜபக்சே சகோதரர்கள் . இன்றைக்கு இந்த ஒட்டுக்குழுக்கள் எல்லாம் வரிந்து கட்டி கொண்டு கோத்தபாயா ராஜபக்சே பின்னால் அணிதிரண்டு நிற்கும் சூட்சுமம் இது தான்

No comments