தேரர்களின் அடாவடியால் வடக்கில் நீதிமன்றங்கள் முடங்கியது


முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரத்தில் முல்லைத்தீவு நீதிமன்றின் கட்டளையை அவமதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்குத் துணை நின்றபொலிஸாரை நீதியின் முன் நிறுத்த வலியுறுத்தியும், சட்டத்தரணி கே.சுகாஷ் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும் வடக்கு மாகாண சட்டத்தரணிகள் இன்று செவ்வாய்க்கிழமை வடமாகாணம் தழுவிய சேவைப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் குறித்த சேவை புறக்கணிப்பு நடவடிக்கைக்கு வவுனியா மாவட்ட சட்டதரணிகளும் தமது பூரண ஆதரவை தெரிவித்துள்ளதுடன், நேற்றையதினம் நீதிமன்ற நடவடிக்கைளிற்கு சமூகம் அளிக்காத வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் முல்லைத்தீவில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொண்டிருந்தனர்.

இதனால் வவுனியா மாவட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு வழக்குகளிற்காக நீதி மன்றிற்கு வருகை தந்திருந்த பொதுமக்கள் அசௌகரியங்களை சந்தித்திருந்தனர்.

முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்கள் , அதற்கு துணை நின்ற பொலிஸாரை நீதியின் முன் நிறுத்துமாறு வலியுறுத்தி கல்முனை நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் கல்முனை நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற வளாக முன்றலில் ஒன்று கூடிய சட்டத்தரணிகள் நேற்று முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்கள், அதற்கு துணை நின்ற பொலிஸாரை நீதியின் முன் நிறுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் சட்டத்தரணிகள்  மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

No comments