சொந்தக் காணியே எமக்கு வேண்டும் - கேப்பாப்புலவு மக்கள்


கேப்பாப்புலவு காணிகளை பார்வையிட ஒரு வாரத்தில் ஏற்பாடு செய்வதாக வடக்கு ஆளுநர் கூறியிருந்தார். அவர் கூறிய காலக்கெடு முடிந்து விட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென இராணுவத்தினரால் கையகப்படுத்த காணிகளை விடுவிக்க கோரி தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் கேப்பாப்புலவு மக்கள், நேற்று (29) செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 20ம் திகதி வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தமது காணிகள் தொடர்பாக, ஒரு வாரத்தில் முடிவு ஒன்றை சொல்வதாக கூறப்பட்டது. இராணுவத்தினருடனும் கலந்துரையாடி முடிவை சொல்வதாக ஆளுநர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஒரு வாரம் முடிவடைந்துள்ள நிலையில், தமக்கான எந்தவொரு முடிவும் தெரிவிக்கப்படவில்லை எனவும், தொடர்ந்தும் முடிவுக்காக தாம் காத்திருப்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் காணிகளை விடுவிக்குமாறு கோரும் தாம் மற்றுக் காணிகளையோ அல்லது நஷ்ட ஈட்டையோ கோரவில்லை, தங்களது சொந்த காணிகளை விடுவிக்க வேண்டும் என்றே கோருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வரும் தேர்தலுக்கு முன்னதாக தமது பிரச்சினைக்கு தீர்வு தர வேண்டும் என்று தெரிவித்துள்ள மக்கள், தேர்தலில் சொந்த நிலத்திலிருந்தே வாக்களிப்பதற்கு முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

No comments