ஆன்மீக முகாமில் நடந்த விபரீதம்- இருவர் மரணம்

அனுராதபுரம் - ஹொரவப்பொத்தானை பகுதியில் ஆன்மீக ஆரோக்கிய முகாம் ஒன்றில் சிகிச்சை பெற சென்ற இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆன்மீக சக்தியில் நோய்களைக் குணப்படுத்தும் நபர் ஒருவரால் நடாத்தப்பட்ட முகாம் ஒன்று அனுராதபுரம் ஹொரவப்பொத்தானை மத்திய மகா வித்தியாலயத்தின் மைத்தானத்தில் நேற்று இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டிருந்த இரண்டு நோயாளர்கள் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு நாடு பூராகவும் இருந்து சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வருகை தந்துள்ளனர். இந்நிலையில், இதில் கலந்து கொண்ட நோய் முற்றிய நிலையில் இருந்த இரண்டு நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய தினுஷா டி சில்வா மற்றும் காலி பிரதேசத்தை சேர்ந்த 78 வயதுடைய ஏ.எம்.ரணவக்க என்ற நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 18 பேர் நோய் நிலைமை காரணமாக ஹொரவப்பொத்தானை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments