பொலிஸ் நிலையம் முற்றுகை பிரதேச சபை உறுப்பினரின் மனைவி கைது!

வவுனியா புதிய கற்பகபுரத்தினை சேர்ந்த பொதுமக்கள், பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தினை முற்றுகையிட்டமை யால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நேற்று ஏற்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாகத் தெரியவருகையில், நபர் ஒருவர் தன்னை தாக்கியதாகத் தெரிவித்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வவுனியா தெற்கு தமிழ்ப்பிரதேச சபை உறுப்பினர் ஒருவர், பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

குறித்த முறைப்பாட்டிற்கமைய புதிய கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த கபில்ராஜ் என்ற 23 வயதுடைய இளைஞரை பூவரசங்குளம் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தாக்கியதாகப் கூறப்பட்ட  முறைப்பாடு பொய் எனக் கூறியும், கைது செய்யபட்ட இளைஞரை விடுவிக்கக்கோரியும் புதிய கற்பகபுரம் கிராமத்தைச் சேர்ந்த எண்பதிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தினை முற்றுகையிட்டனர்.

இதேவேளை இளைஞரைத் தாக்கிய பிரதேச சபை உறுப்பினரிடம் விளக்கம் கேட்கச் சென்ற இளைஞரின் மனைவியை, பிரதேசசபை உறுப்பினரும், அவரது மனைவியும் தாக்கியதாகத் தெரிவித்து பிறிதொரு முறைப்பாடும் பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பொலிஸார் பிரதேச சபை உறுப்பினரின் மனைவியைக் கைது செய்தனர். இதனால் குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

பிரதேச சபை உறுப்பினரின் மனைவி கைது செய்யப்பட்ட பின்னர் இரவு 11.30 மணியளவில் பொதுமக்கள் பொலிஸ் நிலையத்திலிருந்து கலைந்து சென்றனர்.

முறைப்பாடளித்த பிரதேச சபை உறுப்பினர் மற்றும் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட கபில்ராஜ் என்பவரின் மனைவி ஆகியோர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments