வெல்லும்வரை வீண் முயற்சி, வென்றபின்பு விடா முயற்சி என்பர்- பாலன் சந்திரன்

•வெல்லும்வரை வீண் முயற்சி என்று இகழ்வார்கள்
வென்றபின்பு விடா முயற்சி என்று பாராட்டுவார்கள்

10 வருடமாக நடக்கிறார்கள். சயிக்கிளில் ஓடுகிறார்கள் என்ன பயன் கண்டார்கள்? என சிலர் கிண்டலாக கேள்வி கேட்கின்றனர்.

இன்று வீண் முயற்சி என்று கிண்டல் அடிப்பவர்கள் வென்றபின்பு விடா முயற்சி என்று பாராட்டுவார்கள்.

அது சரி. ஆனால் இவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று எப்படி கூறுகின்றீர்கள் என அந்த சிலர் கேட்பார்கள்.

ஓட முடியாதவர்கள் நடப்பார்கள். நடக்க முடியாதவர்கள் தவழ்ந்து செல்வார்கள். ஆனால்  இலக்கை அடையும்வரை அனைவரும் நகர்ந்துகொண்டே இருப்பார்கள்.

தமிழ் மக்கள் தமது இலக்கை நிச்சயம் அடைவார்கள் ஏனெனில் அதற்காக அவர்கள் பல வழிகளில் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று நாம் அவர்களுக்கு கூறலாம்.

ஆனால் இதை அந்த சிலரால் புரிந்துகொள்ள முடியாது. எனவே  அந்த சிலர் தொடர்ந்தும் என்ன பயன் என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.

அவர்களுக்கு நாம் சொல்லும் எளிய பதில் “ தமிழ் மக்கள் தமக்கான நியாயத்தை பெறுவதற்காக சர்வதேச மக்களிடம் செல்கின்றனர்”. மக்களிடம் செல்லும் எவரையும் மக்கள் ஏமாற்றியதில்லை.

இரண்டு நாட்களில் 40 அயிரம் மக்களை கொன்று புதைத்தால் ஈழத் தமிழ் இனம் போராட்டத்தை கைவிட்டு அடிமையாக கிடக்கும் என இலங்கை இந்திய அரசுகள் நினைத்தன.

ஆனால் கடல் கடந்து போனாலும் தம் உறவுகளுக்காக தமக்கு தெரிந்த வழியில் தம்மால் இயன்ற போராட்டத்தை முன்னெடுக்க முடியும் என்பதை புலம்பெயர்ந்த தமிழர்கள் காட்டி வருகின்றனர்.

தாம் வாழும் நாடுகளில் அவர்கள் மக்களை சந்தித்து தமக்கான நியாயத்தை கேட்டு வருகின்றனர்.

மக்களே , மக்கள் மட்டுமே வரலாற்றை படைக்கிறார்கள். தலைவர்கள் அல்ல.

எனவே தமிழ் மக்களும் தமக்குரிய வரலாற்றை நிச்சயம் படைப்பார்கள். இதில் எந்த சந்தேகமும் இல்லை.

No comments