சந்தேக நபர் ஒருவரால் யாழில் நீதிமன்றில் பரபரப்பு!


யாழ். நீதிவான் நீதிமன்ற மறியல் கூடத்திற்குள் சந்தேக நபா் ஒருவா் பிளேட்டினால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இந்த சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது,

சந்தேகநபருக்கு எதிராக ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டு பொலிஸாரால் முன்வைக்கப்பட்டுள்ளது. 2 கிராம் 400 மில்லிக்கிராம் ஹெரோயின் அவரது உடமையிலிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

அதனால் சந்தேகநபர் கடந்த ஜூலை 5 ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது சந்தேகநபரின் விளக்கமறியலை  நீடித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார். இந்த நிலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் சந்தேகநபர் நீதிமன்ற மறியல் கூடத்துக்குள் தடுத்து வைக்கப்பட்டார். அதன்போதே தான் வைத்திருந்த பிளேட்டால் சந்தேகநபர் தனது கழுத்தை கீறி காயத்தை ஏற்படுத்தினார்.

இதையடுத்து அவரை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல சிறைச்சாலை வாகனம் வர சுமார் அரை மணிநேரம் தாமதமானது. அதனால் சந்தேகநபரின் தாயார் நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்குள் பெரும் சத்தமிட்டு குரல் எழுப்பினார். எனினும் பொலிஸார் அவரை நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே அழைத்துச் சென்று நீதிமன்றில் அமைதியை ஏற்படுத்தினர்.

இதேவேளை, சந்தேகநபரை தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கும் நோக்குடன் ஹெரோயினை  அவரது உடமைக்குள் திணித்து சோடிப்பு வழக்கைத் தாக்கல் செய்தனர் என்று சந்தேகநபரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.

No comments