பன்னாட்டுரீதியில் நடைபெற்ற தமிழ்மொழித் தேர்வு பெறுபேறுகள் வெளியாகியுள்ளது;

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடாத்தப்பட்ட அனைத்துலகத் தமிழ்மொழித் தேர்வு 2019 பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் அனைத்துலக மட்டத்தில் நடாத்தப்பட்ட தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 01.06.2019 அன்று யேர்மன், பிரான்சு, இங்கிலாந்து, டென்மார்க், நோர்வே, இத்தாலி, நெதர்லாந்து, சுவீடன், பெல்சியம், பின்லாந்து, நியுசிலாந்து, கனடா ஆகிய நாடுகளில் அனைத்துலகத் தமிழ்மொழித் தேர்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.
இத் தேர்வு எழுதிய மாணவர்களின் பெறுபேறுகள்; தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் 22.08.2019 அன்று அந்தந்த நாட்டு கல்விக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை 14 நாடுகளுக்கு அதாவது பிரான்சு, பிரித்தானியா, யேர்மன், பெல்சியம், நோர்வே, டென்மார்க், இத்தாலி, நெதர்லாந்து, சுவீடன், அவுத்திரேலியா, நியூசிலாந்து, கனடா, பின்லாந்து, மொரிசியசு ஆகிய நாடுகளுக்கு வளர்தமிழ் பாடநூல்களை வழங்குகின்றது. எமது வளர்தமிழ்ப் பாடநூல்களில் இலக்கியம், இலக்கணம், வரலாறு உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்நூல்கள்
மழலையர்நிலை,
பாலர்நிலை,
வளர் தமிழ் 1
வளர் தமிழ் 2
வளர் தமிழ் 3
வளர் தமிழ் 4
வளர் தமிழ் 5
வளர் தமிழ் 6
வளர் தமிழ் 7
வளர் தமிழ் 8
வளர் தமிழ் 9
வளர் தமிழ் 10
வளர் தமிழ் 11
வளர் தமிழ் 12
வரை உருவாக்கப்பட்டுள்ளன.

இவற்றில் பாடநூல்களாகவும் பயிற்சி நூல்களாகவும் மொத்தம் 26 நூல்களும், துணை நூல்களாக வாசித்தல் நூல்கள்: மாணவர்களின் வாசிப்புத் திறனை வளர்ப்பதற்குரிய நூல்களாகவும் 1 – 4 வரை, 5 – 8 வரை, 9 – 12 வரை மாணவர்களின் பேச்சுத் திறனைத் தூண்டும் வகையில் படங்களை உள்ளடக்கிய கட்புல நூலும், இலக்கணத்தை விரும்பிக் கற்க கற்றல் வள இலக்கண நூல்களும், பட்டயக் கல்வி நூல்கள் எனப் பலவாக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் பல நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இவற்றின் பாடத்திட்ட ஒழுங்கமைப்பு வாழிட நாட்டின் பள்ளிகளின் பொதுக்கல்வித் திட்டத்தோடு இணைந்து செல்கிறது. இப்பாடத்திட்டத்தின் உள்ளடக்கம் மொழி கற்பதோடு மட்டுமன்றித் தமிழர்களின் கலை, பண்பாடு, வாழ்வியல் ஆகியவற்றையும் கற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் சமய இன வேறுபாடுகள் அற்ற அரசியல் சாராத வகையில் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் பாடநூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இக் கற்றல் வள நூல்களை 14 நாடுகளில் உள்ள கல்விக்கழகங்களுக்கும் அனுப்பப்படுகின்றது. கல்விக் கழகங்கள் நூல்களைப் பெற்று அந் நாட்டின் வாழும் தமிழ்கற்கும் பிள்ளைகளுக்கு வழங்கி தமிழ்மொழியை ஆசிரியர்கள் மூலம் கற்பிக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக பிள்ளைகளின் அடைவுகளை அறிந்து கொள்ள தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் அனைத்துலகத் தேர்வு நடாத்தப்படுகின்றது. அவுத்திரேலியா, மொறிசியசு தவிர்ந்த ஏனைய நாடுகளில் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் தேர்வு நடாத்தப்படுகின்றது.
1. அரையாண்டுத் தேர்வு
2. புலன்மொழி வளத் தேர்வு
3. அனைத்துலக எழுத்துத் தேர்வு.

அரையாண்டுத்தேர்வு
மாதிரி வினாத்தாள் ஒவ்வொரு ஆண்டும் தைமாதம் இறுதிச் சனிக்கிழமை நடைபெறுகிறது. அரையாண்டுத் தேர்வு வினாத்தாளகள்; தமிழர்கல்வி மேம்பாட்டுப் பேரவையினாலே அணியஞ் செய்யப்பட்டு 12 நாடுகளிலுள்ள கல்விக்கழகங்களுக்கு அதாவது…
பிரித்தானியா : தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் கிளை நிறுவனம்.
யேர்மனி : தமிழ்க் கல்விக் கழகம்
பிரான்சு : தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம்
நோர்வே : அன்னை பூபதி தமிழ்க் கலைக் கூடம்
டென்மார்க் : மாலதி தமிழ்க் கலைக் கூடம்
நெதர்லாந்து : திருவள்ளுவர் தமிழ்க் கலைக் கூடம்
கனடா : அறிவகம்
நியுசிலாந்து : சிறுவர் பூங்கா
பின்லாந்து : அன்னை பூபதி தமிழ்க் கலைக் கூடம்
இத்தாலி : திலீபன் தமிழ்ச்சோலை
பெல்சியம் : தமிழ்ச்சோலை
சுவீடன் : தமிழ்ச் சோலை
ஆகிய கல்விக் கழகங்களிற்கு அனுப்பப்படுகின்றது. அதன் பிற்பாடு ஆசிரியர்களுக்கு கற்பித்தல் இலகுபடுத்தும் பொருட்டு மாதிரி வினாத்தாள்களுக்கான விடைகளும் புள்ளித் திட்டங்களும் அனுப்பப்படுகின்றன.
புலன்மொழி வளத்தேர்வு
புலன்மொழி வளத்தேர்வு கேட்டல், பேசுதல், வாசித்தல் என்ற அடிப்படையில், மாணவர்களுக்கு கேட்டல் திறனையும் பேசுதல் திறனையும் வாசித்தல் திறனையும் வளர்க்கும் நோக்குடன் இடம்பெறுகின்றது.
புலன்மொழித்தேர்வு வளர்தமிழ் 1 முதல் வளர்தமிழ் 12 வரை நடைபெறுகின்றன. கேட்டலுக்கு ஒலிவட்டும், பேசுதலுக்கு பேசுதல் பகுதியும் வாசித்தலுக்கும் வாசிக்கும் பகுதி கல்விமேம்பாட்டு பேரவையினால் அணியஞ் செய்யப்பட்டு அந்தந்த கல்விக்கழகங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.
பேசுதலுக்கு வளர் தமிழ் 1, 2 வகுப்புகளுக்கு படம் கொடுக்கப்பட்டு வினாக்கள் கேட்கப்படும். வளர்தமிழ் 3, 4, 5 ஆகிய வகுப்புகளுக்கு தலைப்புகள் கொடுக்கப்பட்டு வினாக்கள் கேட்கப்படும். 3, 4, 5ம் வகுப்பிற்கான பேசுதல் நூல் சென்ற ஆண்டு வெளிடப்பட்டது. வளர்தமிழ் 6 முதல் 12 வரை தலைப்புகள் கொடுக்கப்பட்டு அவை தொடர்பாகப் பேசவேண்டும். தலைப்புகள் இரண்டு பிரிவுகளாக இருக்கும். பாடநூல் தலைப்பு பொதுத் தலைப்பு என இரு தெரிவுகள் இருக்கும். அவர்கள் இரண்டு தலைப்புகளிலும் ஒன்றைத் தெரிவுசெய்து பேசவேண்டும். வகுப்புகளிற் கேற்ப பேசும் மணித்துளிகள் மாறுபடும். சில வகுப்புகளிற்கு 2 மணித்துளிகளும் சிலவகுப்புகளுக்கு 3 மணித்துளிகளும் பேசுதலுக்குக் கொடுக்கப்படும். புலன்மொழித்தேர்வுப் புள்ளிகள் எழுத்துத் தேர்வு புள்ளிகளுடன் சேர்க்கப்பட்டு மாணவர்களுக்கான புள்ளிகள் மொத்தமாக வழங்கப்படும்.

கேட்டல், பேசுதல், வாசித்தல் தேர்வில் முறையே 10 புள்ளிகள் அடிப்படையில் 30 புள்ளிகள் வழங்கப்டும். எழுத்துத்தேர்வுக்கு 70 புள்ளிகளும் வழங்கப்படும். புலன் மொழித் தேர்வில் மயக்க ஒலிகளுக்கு கவனம் செலுத்தப்பட்டு புள்ளிகள் வழங்கப்படுகின்றன. சிறுவர்களுக்கான படம்பார்த்துப் பேசுதல் தேர்வில் தமது வாழிட மொழியில் பேசுவது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அதற்குரிய தமிழ்ச்சொல்லை ஆசிரியர் திரும்பக் கேட்கவேண்டும். அத்துடன் வடமொழிச் சொற்கள் மற்றும் பிறமொழிச் சொற்களும் ஏற்புடையதல்ல. புலன்மொழித்தேர்வில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பேசுதலும் வாசித்தலும் மட்டுமே. கேட்டல் பகுதி இல்லை. இந்த இரு வகுப்புகளுக்கும் 20 புள்ளிகள் வழங்கப்பட்டு, எழுத்துத் தேர்வுக்கு 80 புள்ளிகள் வழங்கப்படுகின்றன.
அனைத்துலக எழுத்துத் தேர்வு
கேட்டல், பேசுதல், வாசித்தல் ஆகிய மூன்று திறன்களையும் புலன்மொழிவளத் தேர்வு மூலம் நிறைவு செய்த பிள்ளைக்கு எழுதுதல் திறனாக எழுத்துத் தேர்வு அமைகின்றது. எழுத்துத் தேர்வு 12 நாடுகளுக்கும் ஒரே நாளில் அதாவது ஆனிமாதம் முதல் சனிக்கிழமை நடைபெறுகின்றது. தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் தேர்வுத்தாள்கள் அணியஞ் செய்யப்பட்டு அனைத்து நாடுகளிலுமுள்ள கல்விக்கழகங்களுக்கும் மே மாத இறுதியில் அனுப்பி வைக்கப்படும்.
கல்விக் கழகங்கள் தேர்வினை நடாத்தி மாணவர்களின் விடைத்தாள்களை தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். அனைத்து நாடுகளிலிருந்தும் வகுப்பு நிலைக்கேற்ப ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு விடைத்தாள்கள் திருத்தப்படும்.
ஒரு நாட்டைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு அந்த நாட்டு விடைத்தாள்கள் திருத்த வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை.
ஒவ்வொரு விடைத்தாளும் வெவ்வேறு ஆசிரியர்களால் மூன்று முறை மீள்பார்வை செய்யப்படும்.
தேர்வுப் பெறுபேறுகள் ஆகத்து மாத நடுப்பகுதியில் அனைத்து நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
ஒக்ரோபர் – நவம்பர் காலப்பகுதிகளில் பெறுபேறுகளுக்கான சான்றிதழ்கள் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் வழங்கப்படும்.
இத்தேர்வின் பெறுபேறுகளில் இருந்து கடந்த ஆண்டுகளை விட இம்முறை சிறந்த பெறுபேறுகளைப் பெற்றிருப்பது மாணவரினதும் பெற்றோர்களினதும் தமிழ்மொழி மீது கொண்ட பற்றையும் கல்விக் கழகங்களினதும் ஆசிரியர்களினதும் இனப்பற்றையும் மொழிப்பற்றையும் அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.
வளர்தமிழ் நூல்களைப் பயன்படுத்தி இத்தேர்வில் மாணவர்களைப் பங்கேற்க வைக்கின்ற கல்விக்கழகங்களுக்கும் பள்ளி நிர்வாகிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை வாழ்த்துக்களையும் நன்றியையும் கூறிக்கொள்கின்றது.
TEDC
4 AV DES PRIMEVERES
77290 MITRY MORY
FRANCE






No comments