வைத்தியரை விடுவிக்க கோரி நாளை கடையடைப்பு?


பளை ஆதார வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் கலாநிதி சிவரூபன் விடுதலையினை வலியுறுத்தி நாளை வெள்ளிக்கிழமை கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டள்ளது.நாளை வெள்ளிக்கிழமை பளை பிரதேச வர்த்தக நிலையங்கள்,சந்தைகள்,அரச நிறுவனங்கள் என அனைத்தினையும் மூடி போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை அரசின் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுவருகின்றார்.  அவர் கைது செய்யப்பட்ட சம்பவத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டித்துள்ளது.

வைத்தியர் சிவரூபன்; சட்ட வைத்திய அதிகாரியாக பணியாற்றிய காலப்பகுதியில் அரச படைகளின் துன்புறுத்தல்களினால்  ஏற்பட்ட பதிப்புக்களை மூடிமறைப்பதற்கு இடமளிக்காது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாகவும் நேர்மையாகவும் துணிச்சலுடனும் செயற்பட்டிருந்தார். 

அவர் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி கைது செய்திருப்பதானது அவரைப் பழிவாங்கும் நோக்கம் கொண்ட செயலாகும். நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டமானது உலகிலுள்ள மிகக் கொடிய சட்டங்களில் ஒன்றாக உள்ளமையை சுட்டிக்காட்டியுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது அச்சட்டத்தை நீக்க வேண்டுமென 2015ஆம் ஆண்டிலேயே வலியுறுத்தியிருந்தது.இலங்கை அரசும் அதற்கு இணங்கியிருந்தது. எனினும் இன்று வரை அச்சட்டம் நீக்கப்படவில்லை என்பதுடன் அதன் கீழ் கைதுகளும் சித்திரவதைகளும் தொடர்ந்த வண்ணமேயுள்ளது. 

கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படல் வேண்டுமென வலியுறுத்துவதுடன் வைத்திய கலாநிதி சிவரூபன்  உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது.

No comments