சத்தியலிங்கத்தை பிரதமர் பாராட்டினாராம் - ஏன் தெரியுமா?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

வவுனியா வைத்தியசாலையில் நேற்று (14) இடம்பெற்ற அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே இந்த பாராட்டை தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்திற்கான மூலோபாய சுகாதார அபிவிருத்தித் திட்டம் தயாரித்து அதனடிப்படையில் நெதர்லாந்தின் நிதிஉதவி மற்றும் இலகுகடன் அடிப்படையில் பெறப்பட்ட 60 மில்லியன் யூரோ (12,000 மில்லியன் இலங்கை ரூபா) நிதியில் வவுனியா வைத்தியசாலையில் இருதயநோய் சிகிச்சைப்பிரிவு மற்றும் சிறுநீரக நோய் சிகிச்சை பிரிவு என்பனவும்,  பருத்திதுறை ஆதார வைத்தியசாலையில் நவீன சத்திரசிகிச்சை மற்றும் கதிரியக்கப் பிரிவும், கிளிநொச்சியில் தாய்சேய் விசேட சிகிச்சை மத்திய நிலையமும்,  மாங்குளத்தில் விசேட தேவைக்குட்பட்டவர்களிற்கான சிகிச்சை பிரிவு மற்றும் உளநலப்பிரிவும் அமைக்க முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்நிதியை நெதர்லாந்து அரசாங்கத்திடமிருந்து பெறுவதற்கான முயற்சிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக மத்திய சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் முன்னாள் வடக்கு சுகாதார அமைச்சரால்  முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அந்த நடவடிக்கை தொடர்பிலேயே பிரதமர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

No comments