அலஸ்தோட்டத்தில் தாறுமாறாக ஓடிய கார் - பலர் காயம்

திருகோணமலை - புல்மோட்டை பிரதான வீதியில் அலஸ்தோட்டம் பகுதியில் நேற்று (14) இரவு 7.30 மணியளவில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து நான்கு வாகனங்களுடன் மோதிய விபத்தில் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் திருமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சொகுசு காரொன்று அலஸ்தோட்டம் பகுதியில் ஸ்கூட்டர் மோட்டார் சைக்கிளுடன் மோதி குறித்த மோட்டார் சைக்கிளின் பாகம் இன்னுமொரு காருடன் மோதி அக்காருக்கும் சேதமேற்டுத்தியது. இதனையடுத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் மேலும் முச்சக்கர வண்டியையும் துவிச்சக்கர வண்டியையும் மோதிவிட்டு அருகில் நின்ற பெண்ணுடன் மோதியுள்ளது.

இதனையடுத்து கோபம் கொண்ட பிரதேச மக்கள் காருக்கு தீ வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் திருகோணமலை - புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த ஏ.சந்திரகுமார் (28), உப்புவெளி பகுதியைச் சேர்ந்த பீ.ரேவதி (60), வரோதய நகர் பகுதியைச் சேர்ந்த பீ.ஓவியா (16), சதீஷ்குமார் (32), ஜே.பிஹிலா (23) மற்றும் ஜே.மிதுலா (25) ஆகியோர் காயமடைந்தனர்.

குறித்த விபத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments