இலங்கை அரசின் பிச்சைக்காசு முயற்சி தோல்வியில்?


காணாமல் போனோரது குடும்பங்களிற்கு 6 ஆயிரம் ரூபா இடைக்காலக்கொடுப்பனவென பிச்சைக்காசு வழங்கும் இலங்கை அரசின் முயற்சி பிசுபிசுத்துப்போயுள்ளது.

குறித்த கொடுப்பனவைப்பெறுவதற்காக இதுவரை 650 பேரின் பெயர் விபரம் மட்டுமே பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் இருந்து அரச கரும மொழிகள் மற்றும் தேசிய நல்லிணக்க அமைச்சிற்கு கிடைத்துள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
எனினும் காணாமல் போயுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளவர்களது பெயர் விபரங்களுடன் ஒப்பிடுகையில் இச்சதவிகிதம் மிகக்குறைவானதென தெரியவருகின்றது.

காணாமல் போனவர்களது குடும்பங்களிற்கு உதவவென இலங்கை அரசு 2019ம் ஆண்டின் பாதீட்டில் நிதி ஒதுக்கியுள்ளது. அவ்வாறு ஒதுக்கிய நிதியில் இருந்தே குறித்த கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளது.

இதேநேரம் குறித்த நிதியினைப் பெறுவதற்கு காணாமல் போனவர் என்ற சான்றிதழைச் சமர்ப்பிக்கவேண்டிய தேவை உள்ளது. இதன் பிரகாரம் 2018ஆம் ஆண்டு வரை குறித்த சான்றிதழைப் பெற்றவ்களிற்கு வரவு செலவுத் திட்டத்தில் அனுமதித்த காலம் முதலும் 2019ஆம் ஆண்டில் குறித்த சான்றிதழைப் பெறுபவ்களிற்கு சான்றிதழை பெற்றுக்கொள்ளும் மாதம் முதலே கொடுப்பனவு கிடைக்கும் சந்தர்ப்பம் உள்ளது.

எனினும் இவ்வாறு காணாமல் போனோர் சான்றிதழை வழங்குவதன் மூலம் விடயத்தை அமுக்கிவிட அரசு முற்படுவதாக அவர்களது குடும்பங்கள் குற்றச்சாட்டுக்களை எழுப்பிவருவது தெரிந்ததே.

No comments