கோத்தாவிற்கு இன்னமும் கண்டம் தீரவில்லை!


முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் பெயர் 2019 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் வெளியிடப்படும் அமெரிக்கப் பிரஜாவுரிமை நீக்கப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலில் சேர்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள பெயர்ப் பட்டியலில் இவரின் பெயர் காணப்படாதுள்ளதாகவும் கூறப்படுகின்றது. தற்பொழுது வெளியாகியுள்ள பட்டியல் மார்ச் 01 ஆம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையான காலத்துக்குரிய பெயர்ப்பட்டியல் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பெயர்ப்பட்டியலில் பெயர் வெளிவரும் வரையில், கோட்டாபய ராஜபக்ஸ அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கிக் கொண்டதாக தகவல் வெளியிடுவது, அமெரிக்க சட்டப்படி சட்டமுரணானது என்பதனால் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இது குறித்து எந்த அறிவிப்பையும் விடுக்காதுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பிரித்தானியாவின் லண்டன் நகரில் இயங்கும் பி.பி.சி. நிறுவனமும் இது பற்றிய தகவல்களை வெளியிடுமாறு விடுத்த வேண்டுகோளை, கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் நிராகரித்திருந்ததாகவும் இன்றைய தேசிய ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் அரசியல் யாப்பின்படி இரட்டைப் பிரஜாவுரிமையுள்ள ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது. இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ஸவின் பெயர் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் அமெரிக்கா அவரது பெயரை பிரஜாவுரிமையிலிருந்து நீக்கியதாக உத்தியோகபுர்வமாக அறிவிக்கவில்லையென அரசியல் தரப்பில் கூறப்படுகின்றது.
இருப்பினும், பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில, அவரது இரு கண்களினாலும் கோட்டாபய ராஜபக்ஸவின் பிரஜாவுரிமை நீக்கப்பட்டதற்கான சான்றிதழைக் கண்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊடகங்களிடம் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

No comments