முல்லையில் கடத்தலில் கூட்டமைப்பு எம்பிக்கள்?


முல்லைதீவில் நடைபெற்றுவரும் சட்டவிரோத மணல் அகழ்வின் பின்னணியில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவமோகன் மற்றும் சாந்தி சிறீஸ்கந்தராசாவின் ஆதரவாளர்கள் மும்முரமாகியிருப்பதாக தெரியவருகின்றது.முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களாக இவர்கள் உள்ள போதிலும் இவற்றைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. கசப்பான உண்மை என்னவெனில் இச் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களில் பலர் இவ்விரு அரசியல்வாதிகளினதும் ஆதரவாளர்கள் மற்றும் பினாமிகளாவர் என குற்றச்சாட்டுக்கள் வலுத்துள்ளன.அதிலும் அரசியல் செல்வாக்கு மற்றும் இலஞ்சம் போன்ற காரணங்களால் பொலீஸார் இவற்றைக் கண்டும் காணாமல் இருந்து விடுகிறார்கள் என உள்ளுர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

வடமாகாணத்தில் பரப்பளவில் பெரியதும் சனத்தொகையில் குறைந்ததும் இயற்கை வளங்கள் நிறைந்ததுமான மாவட்டம் முல்லைத்தீவு. இறுதிவரை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தமையால் இம்மாவட்டத்தின் இயற்கை வளங்கள் 2009 வரை பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்திருந்தது. ஆனால் தற்போது நிலமை தலைகீழாக மாறியுள்ளது.

சட்டவிரோதமாகக் காடுகள் அழிக்கப்பட்டு மரங்கள் தென்னிலங்கைக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றன. பாலியாறு , அமதிபுரம் , பேராற்றை ஒட்டிய பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு பெருமளவில் இடம்பெறுகின்றது. ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள புராதன அடையாளமான வாவெட்டி மலை கொஞ்சம் கொஞ்சமாக வெட்டப்பட்டு தென்பகுதிகளிற்கு கற்களாக ஏற்றப்படுகின்றது.

இப்பிரதேசம் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள போதிலும் இரண்டு கல் அகழும் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு பெருமளவில் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஒரு வருடத்தில் 600 கியூப் கல் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் தற்போது மூவாயிரம் கியூப் கல் அகழப்படுகிறது. கொழும்பில் உள்ள இரண்டு தனியார் நிறுவனங்கள் கொழும்பு நிர்வாகத்திடம் அனுமதியைப் பெற்று பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கருங்கற்களை அகழந்தெடுத்து கொழும்புக்கு ஏற்றுகின்றனர் எனவும் அத்தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

No comments