இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது மேல் நீதிமன்றம்

கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் வழக்கில் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் வழங்கிய கடூழிய சிறைத் தண்டனை தீர்ப்பினை கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம் சரி என உறுதி செய்துள்ளது.

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி இளம்பெண் கூட்டு பாலியல் துஷ்பிரயோக வழக்கில் நான்கு இளைஞர்களுக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து 2016ம் ஆண்டு அன்றைய மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்திருந்தார்.

அந்த தீர்ப்பிற்கு எதிராக நான்கு குற்றவாளிகளும் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தனர். குறித்த மனுவை விசாரித்த மேன் முறையீட்டு நீதிமன்றம், விசாரணை முடிவில் நீதிபதி மா.இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு சரியானது என தெரிவித்து அந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

2009ம் ஆண்டு ஜூலை மாதம் சாவகச்சேரி இளம் பெண் நான்கு இளைஞர்களால் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்து, 2015ம் ஆண்டு யாழ். மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கில் பாதிக்ப்பட்ட பெண்ணின் சாட்சியத்தில் முற்று முழுதாக நம்பிக்கை உள்ளது என நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்து நான்கு குற்றவாளிகளுக்கும் 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்திருந்தார்.

இந்த தீர்ப்பினையே மேன்முறையீட்டு நீதிமன்றம் சரியென உறுதிசெய்துள்ளது. அத்துடன் இந்த தீர்ப்பு மேன்முறையீட்டு நீதிமன்றின் இணையத்தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

No comments