தமிழ் பேசும் மக்கள் என்ற நிலையில் இருந்து முஸ்லீம்கள் பிரிந்து சென்றமையே பிளவுக்கு காரணமாகும் - சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ் பேசும் மக்கள் என்ற நிலையில் இருந்து முஸ்லீம்கள் பிரிந்து சென்றமையே பிளவுக்கு காரணமாகும் என முஸ்லீம் பிரதிநிதிகளிடம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் பேசும் மக்கள் என்ற நிலையில் இருந்து முஸ்லீம்கள் தனித்து பிரிந்து சென்றமையே தமிழ்-முஸ்லீம் இனங்களுக்கும் இடையேயான பிளவுக்கு காரணமாகும் என சமூக மேம்பாட்டிற்கான நல்லிணக்கப் பேரவையின் தலைவரும் அரசியல் விமர்சகருமாகிய எம்.எச்.எம்.இப்ராஹிம் தலைமையிலான குழுவினருடனான சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் குறைகளை கேட்டறியும் முகமாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தலைமையிலான மத்தியகுழு அணியினர் மட்டக்களப்பில் தங்கியிருந்து மக்கள் சந்திப்புகளை மேற்கொண்டிருந்த நிலையில் கடந்த செவ்வாய் கிழமை கல்முனைக்கு சென்று கல்முனை வடக்கு உப பிரதேச செயலக விவகாரத்துடன் தொடர்புடைய தரப்புகளுடன் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர். அதன் போது கல்முனை பகுதி முஸ்லீம் சமூகத்தின் சார்பில் சந்தித்திருந்த சமூக மேம்பாட்டிற்கான நல்லிணக்கப் பேரவையினருடனான சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது...

தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தப் போகின்றார்கள் என்று தெரிந்தபோது அப்போது கல்வி அமைச்சராக இருந்த பஹ்ரின் மொஹமட் உள்ளிட்டவர்கள் ஆலோசனையின் அடிப்படையில் முஸ்லீம்களாக பிரிந்து செல்வதென்று முடிவெடுக்கப்பட்டது. தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தும் போது தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் அரசாங்கம் எம்மீதும் நடவடிக்கை எடுத்துவிடும் என்ற எண்ணத்தில்தான் தமிழ் பேசும் இஸ்லாமியர் என்ற நிலையில் இருந்து முஸ்லீம் என்று தனியாக அடையாளப்படுத்தி பிரிந்து சென்றீர்கள்.

அவ்வாறு பிரிந்து சென்றமையே தமிழ்-முஸ்லீம் இனங்களுக்கிடையே பிளவு ஏற்படக் காரணமாக அமைந்திருந்தது. இருந்தாலும் அதுவும் ஒரு வகையில் உங்களுக்கு நன்மையை கொடுத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். தமிழர்கள் எதை எதை இழந்தார்களோ அவற்றை குறிப்பாக கல்வி உள்ளிட்ட விடயங்களில் முன்னேறக்கூடியதாக இருந்தது. தமிழர்களை பயங்கரவாதிகளாக முத்திரை குத்தி ஒதுக்கிய நிலையில் தமிழர்கள் வீழ்ச்சியடையவும் உங்களுக்கு நல்ல எதிர்காலம் அமையக் கூடியதாகவும் அமைந்திருந்தது.

ஏப்ரல்-21 இற்கு பின்னர் வித்தியாசமான சூழல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக குருநாகலில் உள்ள ஒட்டுமொத்த முஸ்லீம்களும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது. அது குறித்து எனது கருத்தினை தெரிவிக்கும் போது, தமிழர்களுக்கு 1958 இலும் 1983 இலும் இதுதான் நடந்தது. முஸ்லீம் உணவகங்களுக்கு போகவேண்டாம், முஸ்லீம் வர்த்தக நிலையங்களுக்கு போகவேண்டாம் என்று ஒட்டுமொத்தமாக ஒதுக்கும் நிலை இருப்பதை காணக்கூடியதாக உள்ளது. தமிழர்களுக்கு அன்று எவ்வாறு நடந்ததோ இன்று முஸ்லீம்களுக்கு அவ்வாறே நடக்கிறது என்ற அடிப்படையில் தமிழ்-முஸ்லீம் ஒற்றுமை மிகவும் முக்கியம் என்பதனை நான் வலியுறுத்தி வருகின்றேன் என்று கூறியிருந்தார்.

தமிழ் கிராமங்கள் முஸ்லீம் கிராமங்களாக மாற்றப்படுவது, தமிழ் பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு மத மாற்றம் செய்யப்பட்டு வருவது குறித்தும் தெரிவித்திருந்த கருத்துகள் குறித்த தமது அபிப்பிராயங்களை வெளிப்படுத்தியிருந்ததுடன் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் கருத்தினையும் கேட்டிருந்தார்கள். அதற்கு பதிலளித்த போது, என்னை சந்தித்த தமிழ் மக்கள் கூறியவிடயங்களின் அட்ப்படையிலும் அத்துரலிய ரத்ன தேரர் கூறிய தகவல்களின் அடிப்படையிலுமே இக்கருத்துகளை தெரிவித்திருந்தேன். அது குறித்து சரி எது பிழை எது என்று உண்மையை வெளிக்கொண்டுவரவே இவ்விடயங்களை வெளிப்படுத்தியிருந்தேன்.

நாங்களும் வாழ வேண்டும் மற்றவர்களும் வாழ வேண்டும் என்ற சிந்தனை எங்களுக்கிடையே இருந்தால் கிழக்கு மாகாணத்தில் இந்த பிரச்சினை ஏற்படாது. மாறாக நாங்கள் மட்டும் வாழவேண்டும் மற்றவர்களை தொலைக்க வேண்டும் வெளியேற்ற வேண்டும் என்று செயற்பட்டால் இந்த பிரச்சினை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். நாரதர் கலகம் நன்மையை ஏற்படுத்தும். அந்த வகையில் நான் நாரதர் வேலையை செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். நான் முஸ்லீம்களுக்கு எதிரானவன் இல்லை. இதன் மூலம் நன்மை நடக்கும் என்று நம்புகிறேன்.

தமிழ் மொழியூடாகவே கிழக்கு முஸ்லீம் சமூகத்துடன் எனக்கு பிணைப்பு ஏற்பட்டிருந்தது. அஷ்ரப் உடன் எனக்கு நல்ல நெருங்கிய உறவு இருந்தது. தமிழ் பேசும் மக்களாக இருந்தால் முஸ்லீம் மக்களின் உரிமைகளை பாதுகாக்க முடியாது போய்விடும் என்று கூறியிருந்தார். 70, 75 களிலேயே நாம் இது குறித்து சிந்திக்கத் தொடங்கி விட்டோம். நிலத்தொடர்ச்சி அற்றவகையில் இருக்கும் முஸ்லீம் பகுதிகளை ஒன்றிணைத்து ஒரு அதிகார அலகை உருவாக்கினால் என்ன என்று அஷ்ரப் அப்போது என்னிடம் ஆலோசித்திருந்தார்.

பக்கம் பக்கமாக இருக்கும் போது நாங்கள் தனிப்பட்ட விதத்திலே எங்களைப் பற்றி மட்டும் யோசிக்க முற்பட்டால் கட்டாயம் பிரச்சினை வரத்தான் செய்யும். எமது கட்சியைப் பொறுத்தவரை வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும். முஸ்லீம்களுக்கு ஒரு தனி அலகு கொடுக்க வேண்டும் என்பதனை ஏற்றுக்கொண்டுள்ளோம். அதில் எந்த மாற்றமும் இல்லை என்று சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கூறியிருந்தார்.

வட மாகாணத்தில் இருந்து இங்கு வந்து எம்மை சந்தித்து உரையாடியதுடன் இங்குள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஏனென்றால் முதலமைச்சருக்கு அப்பால் ஒரு நீதியரசராகவும் இருந்திருக்கிறீர்கள். இங்கு வந்து கல்முனை பிரதேசம் குறித்து பலதரப்பினரையும் நேரில் சந்தித்து ஆராய்ந்துள்ளீர்கள். நீங்கள் மத்தியஸ்தராக இருந்து இரு சமூகமும் பிளவுபடாத வகையில் கல்முனை பிரதேசத்தில் கல்முனை மக்களாக எல்லோரும் ஒற்றுமையாக வாழ வழி ஏற்படுத்த வேண்டும் என சமூக மேம்பாட்டிற்கான நல்லிணக்கப் போரவையினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

அதற்கு பதிலளிக்கும் போது, நிதியும், காணியும் தொடர்பான நடவடிக்கைகளை அந்தந்த பகுதி மக்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகார சபைகளே கையாள வேண்டும் என்பது பொதுவான கருத்து. கல்முனை விவகாரம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதால் தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட தனது சுயநலனுக்காக இந்த விடயத்தை கையாண்டு சிக்கலை அதிகமாக்கியுள்ளார். 1989 ஆம் ஆண்டு தொடக்கம் இருந்து வரும் பிரச்சினை. அகவே ஆழமாக சிந்தித்து ஆராய்ந்து பார்த்த பின்பே ஒரு முடிவுக்கு வரலாம் என்று சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தெரிவித்திருந்தார்.

முன்னதாக சமூக மேம்பாட்டிற்கான நல்லிணக்கப் பேரவையினரது அழைப்பின் பெயரில் செவ்வாய் கிழமை நண்பகல் 12.00 மணியளவில் சென்றிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை சமூக மேம்பாட்டிற்கான நல்லிணக்கப் பேரவையின் தலைவரும் அரசியல் விமர்சகருமாகிய எம்.எச்.எம்.இப்ராஹிம் அவர்கள் மாலை அணிவித்து வரவேற்று அழைத்துச் சென்றிருந்தார். இச்சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments