இளைஞனை அடித்துக்கொன்ற சுன்னாகம் பொலிசாரை விடுவிக்க கோரிக்கை

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது சித்திரவதை செய்யப்பட்டு அடித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாாி சிந்தக்க பண்டார உள்ளிட்ட 5 பொலிஸாருக்கு எதிரான குற்றப்பத்திாிகையை நிராகாிக்குமாறு யாழ்.மேல் நீதிமன்றில் கோரப்பட்டிருக்கின்றது.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (புதன்கிழமை) மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணிகள் இவ்வாறு கோரியுள்ளனர்.இதனிடையே, இந்த வழக்கை விசாரிப்பதற்கு வேறொரு நீதிபதியை நியமிக்குமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் நீதிச்சேவை ஆணைக்குழுவின் தலைவரான பிரதம நீதியரசருக்கு விண்ணப்பம் செய்திருந்தார்.அதனடிப்படையில் இந்த வழக்கை விசாரிப்பதற்கு யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி தாவூத் லெப்பை அப்துல் மனாப் நியமிக்கப்பட்டார்.

இந்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி தாவூத் லெப்பை அப்துல் மனாப் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதன்போது, திசாநாயக்க முதியன்சேலாகே சிந்தக நிஷாந்த பிரியபண்டார, ராஜபக்ஷ முதியன்சேலாகே சங்ஜீவ ராஜபக்ஷ, கோன்கலகே ஜயன்த, ஞானலிங்கம் மயூரன் மற்றும் வீரசிங்க தொரயலாகே ஹேமசந்திர வீரசிங்க ஆகிய ஐந்து சந்தேக நபர்களை அநுராதபுரம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மன்றில் முற்படுத்தினர்.

அவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் துஷித் ஜோன்சன், ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார், அக்ரம் ஆகியோர் முன்னிலையாகினர். வழக்குத் தொடுனர் சார்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் முன்னிலையானார். விசாரணையின் போது, சந்தேகநபர்கள் ஐவரும் சுமணனை சித்திரவதை செய்த குற்றத்துக்கு சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர் எனவும்,

அதனால் அவர்களுக்கு எதிராக சுமணனைக் கொலை செய்த குற்றச்சாட்டை முன்வைப்பது சட்ட ஏற்பாடுகளுக்கு முரணானது என்றும் தெரிவித்துள்ள சந்தேகநபர்கள் சார்பான சட்டத்தரணிகள், இதனால் கொலைக் குற்றச்சாட்டு குற்றப்பத்திரிகையை மன்று தள்ளுபடி செய்யவேண்டும் என கோரினர்.இதையடுத்து,

இந்த வழக்கை மூத்த சொலிஸ்டார் ஜெனரல் குமாரரட்ணம் நெறிப்படுத்துவார் எனவும் அவர் மன்றில் முன்னிலையாவதற்கு தவணை வழங்கப்படவேண்டும் என்றும் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் மன்றில் தெரிவித்தார்.இருதரப்பு கோரிக்கையையும் ஆராய்ந்த மன்று வழக்கை செப்ரெம்பர் 27ஆம் திகதிவரை ஒத்திவைத்தது.

No comments