மைத்திரியை சந்திக்காது மண்டியது கூட்டமைப்பு?


"கன்னியாவில் சர்ச்சைக்குரிய இடத்தில் எந்தவித புதிய விகாரை கட்டுமானப்பணிகளும் முன்னெடுப்பது இடை நிறுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலில் சுமூகமான தீர்மானங்கள் சில எட்டப்பட்டதாக தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு, அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் அனுப்பியும் பலர் கலந்துக்கொள்ளவில்லை என்றும் அமைச்சர் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான அரவிந்தகுமார், ஆறுமுகன் தொண்டமான் மற்றும் அமைச்சரவை அந்தஸ்தில்லா அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஆகியோர் வெளிநாடு சென்றுள்ளனதாக அறிவிக்கப்பட்டதாகவும் அமைச்சர் மனோ குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் குறித்து, தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டுள்ள  அமைச்சர் மனோ கணேசன், அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
32 பேர் கொண்ட தொல்பொருளாராட்சி திணைக்களத்தின் வழிகாட்டல் ஆலோசனை சபையில் இருக்கின்ற அனைவரும் சிங்கள பெளத்த வரலாற்றாசிரியர்கள் என்ற நிலையை மாற்றி, மேலதிகமாக 5 தமிழ் வரலாற்றாசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இந்த தமிழ் வரலாற்றாசிரியர்களின் பங்களிப்புடனேயே இனி புராதன சின்னங்கள் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். இதற்கான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சர் மனோ சமர்பிப்பார்.
கன்னியா பிரதேசத்துக்குள் தமிழ் இந்துக்கள் நுழைவதை தடை செய்ய தொல்பொருளாராட்சி திணைக்களத்துக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது. இந்த திணைக்களத்தின் சிற்றூழியர்கள் சிலர் இத்தகைய அடாவடி நடவடிக்கையில் ஈடுபடுவதை திணைக்கள பணிப்பாளர் தன் திணைக்கள மட்டத்தில் உடனடியாக தடை செய்ய வேண்டும்.
முல்லைத்தீவு நீராவியடி கோவில் மற்றும் விகாரை அமைந்துள்ள பகுதியில் எந்தவித புராதன சின்னங்களும் அடையாளம் காணபடவில்லை. அப்படி அங்கே புராதன சின்னங்கள் இருப்பதாக விகாரையின் தேரர் சொல்வது உண்மைக்கு புறம்பானது என தொல்பொருளாராட்சி திணைக்கள பணிப்பாளர் ஏற்றுக்கொண்டார்.
கன்னியா வெந்நீரூற்று கிணறுகளை பாரமரிக்க, தொல்பொருளாராட்சி திணைக்களத்துக்கு அதிகாரமில்லாததால், அவற்றை அந்த பிரதேச சபையிடம் கையளிக்க வேண்டும் என, திருகோணமலை மாவட்ட செயலாளர் புஷ்பகுமார கூறுகிறார். இந்தநிலையில் கிணறுகளை பாரமரிப்பது யாரென தீர்மானிக்க ஜனாதிபதி விரைவில் விசேட கூட்டத்தை கூட்டுவார்.
மலைநாட்டில் கோட்லோஜ் தோட்டத்தில் அமைந்துள்ள முனி கோவிலில் பெளத்த கொடியை அங்குள்ள விஹாராதிபதி ஏற்றியது பிழையானது. பெளத்த பிக்குகள் சட்டத்தை கையில் எடுப்பது பிழை. இந்த பிக்குக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்."ஆகிய தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.
இதேவேளை, இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களான மனோ கணேசன், திகாம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர்களான திலகராஜ், வேலுகுமார், வியாழேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
அவர்களுடன், தொல்பொருளாராட்சி திணைக்கள பணிப்பாளர் நாயகம் மாண்டாவெல, இந்து சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் உமா மகேஸ்வரன், அமைச்சர் மனோ கணேசனின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி கணேஷ்ராஜா ஆகியோம் பங்கேற்றுள்ளனர்.

No comments