நிலசுவீகரிப்பா அல்லது விடுவிப்பா?


வலி வடக்கு ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள பொதுமக்களின் தனியார் காணிகளை அடையாளம் காணவே அளவீடு நடக்கவுள்ளதாக வடக்கு ஆளுநர் தெரிவித்துள்ளார்.காணி விடுவிப்பு தொடர்பிலான சந்திப்பு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில் இன்று (02) முற்பகல் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

பொதுமக்களுடைய தனியார் காணிகள் மீண்டும் பொதுமக்களிடமே கையளிக்க வேண்டும் என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவிற்கமைய பாதுகாப்பு படைகளின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கும் செயற்பாடுகள் மீண்டும் வட மாகாண ஆளுநரின் தலைமையில் ஆரம்பமாகியுள்ளதாக அவரது அலுவலகம் அறிவித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக ஜனாதிபதி மாளிகை மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களை நான்கு வலயங்களாக பிரித்து அதன் முதற்கட்டமாக 62 ஏக்கர் காணியினை அளந்து அப்பிரதேசத்தின் உரிமையாளர்களை இணங்காணுவதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் வியாழக்கிழமை (04) இடம்பெறவுள்ளதுடன், இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஆளுநர்; பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து ஏற்பாடுசெய்துள்ளார். இதனைத்தொடர்ந்து துரிதமாக அக்காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்து ஆளுநர் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
இந்தக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், யாழ்மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முரளீதரன், தெல்லிப்பளை பிரதேச செயலாளர், வடமாகாண நிலஅளவை திணைக்கள அதிகாரிகள்,பிரதேசத்தின் காணி உத்தியோகத்தர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உள்ளிட்ட காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள பிரதேசத்தின் காணி உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

இதனிடையே இன்றைய கூட்டத்தின் போது அங்கு பிரசன்னமாகியிருந்த ஊடகங்கள் வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments