இளையராஜாவுக்கு எதிராக 37பேர்! வைரமுத்துவின் கயமைத்தனம் - கானா பிரபா

கே.பாலசந்தர் நினைவு உரையில் தற்பெருமை பேச மாட்டேன் என்ற முன்னுரையுடன் வைரமுத்து அடித்த சுய தம்பட்ட நினைவஞ்சலி (?) உரையைக் கேட்ட போது ஒன்று புரிந்தது. திரையுலகில் நம்பிக்கைத் துரோகம், பொறாமை எல்லாம் கண்கூடு என்றாலும் தன்னை வளர்த்தவரையே பதம் பார்க்கும் அளவுக்கு மோசமானது என்பதை வெளிப்படையாகக் காண முடியும் என்பதற்கு இவர் ஒரு வாழும் உதாரணம்.

இளையராஜாவை விழுத்த 37 இசைமைப்பாளர்களை உற்பத்தி பண்ணினாராம், ஆறு ஆண்டுகள் தவம் கிடந்தாராம். அட திலீப்பு நீ தான் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளரா என்று ரஹ்மான் வரவால் இளையராஜாவை விழுத்த முடிந்ததாம். இந்தப் பேச்சில் கொஞ்சம் பம்மிப் பம்மியே பேசியிருந்தாலும் யூடியூப் தளத்தில் மட்டும் “அவரைத் தோற்கடிக்க ரஹ்மான் கிடைச்சார்” என்ற மலிவான விளம்பர உத்தியைப் பயன்படுத்திக் கொண்டனர்.

சரி இனி விஷயயத்துக்கு வருவோம்.

“மக்களை சுருள வைக்கும்
திரைப்பட சுருளையெல்லாம்
ஒரு தீக்குச்சிக்கு தின்னக்கொடுப்போம்”
என்று அறச்சீற்றப் பொங்கல் வைத்த வைரமுத்து ஈற்றில் நிழல்கள் வழியாக திரைப்படத்துறைக்குள் ஒதுங்குகிறார். பிள்ளையார் சுழி போட்ட இளையராஜாவின் நிழல்கள் தொடங்கி புன்னகை மன்னன் வரை மொத்தம் ஆறு ஆண்டுகள் தனியே இளையராஜாவின் இசையில் வைரமுத்து எழுதிய பாடல்களைக் கணக்கிட்டாலேயே போதும்  இன்று ராஜாவை ஒதுக்கத் திட்டம் தீட்டியதாகச் சொல்லும் வைரமுத்துவுக்கு ராஜா எவ்வளவு தூரம் கைங்கரியம் செய்திருக்கிறார் என்று புரியும்.

நூற்றுக்கணக்கான பாடல்கள், இவற்றில் ஒரே படத்தில் அனைத்துப் பாடல்களும் வைரமுத்து என்று அள்ளிக் கொடுத்தார் ராஜா. இம்மட்டுக்கும் வாலி, மு.மேத்தா, கங்கை அமரன், நா.காமராசன், காமகோடியன், முத்துலிங்கம், புலமைப்பித்தன், பிறைசூடன் என்று ஒரு பாடலாசிரியர் பட்டாளமே இருக்க வைரமுத்துவுக்கு மட்டும் ராஜா இப்படி அள்ளிக் கொடுத்த கயமைத்தனத்தை (!) என்னவென்று சொல்ல.
அதுமட்டுமா அலைகள் ஓய்வதில்லை, ஆனந்தக் கும்மி, கோழி கூவுது என்று ராஜாவின் குடும்ப நிறுவனப் படங்களிலும் வைரமுத்துவுக்கும் முக்கிய இடம்.
இதைத்தான் கங்கை அமரன் தனது “பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ்” தொடரில், “வைரமுத்துவைக் கண்டதும் அண்ணன் எனக்கே வாய்ப்புக் கொடுக்கல” என்று வாய் விட்டுப் புலம்பினார்.

அப்போதெல்லாம் இளையராஜா இசைக்கு இன்னார் தான் எழுதினால் எடுப்பாக இருக்கும் என்ற நிலை இருந்ததா? உங்கள் நெஞ்சில் கையை வைத்து சொல்லுங்களேன்?

இளையராஜா - வைரமுத்து கூட்டணியின் பாடல்களை இனங்கண்டு ரசித்துச் சிலாகிக்கும் மரபு இன்றைய காலம் போல எண்பதுகளில் இருந்ததில்லையே? பிறகெதற்கு ராஜா வைரமுத்துவை இவ்வளவு தூரம் தலையில் வைத்து ஆடினார்?

இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்குமான தனிப்பட்ட பிரச்சனையை நாகரிகம் கருதிப் பேசாது ஒதுங்கிய என்போன்ற ரசிகர்கள் இந்தக் கூட்டணி மீண்டும் வர வேண்டும் என்று விரும்பியிருந்தாலும் முன் சொன்ன பாடலாசிரியர்களின் பாடல்களை ஈரம் சொட்டச் சொட்ட இன்னும் கேட்டு ரசிக்கிறோமே?

கவிஞர் வாலியின் திறனைக் கூட இந்த கே.பாலசந்தர் அஞ்சலிக் கூட்டத்தில் உரசிப்பார்க்கிறார் வைரமுத்து. உண்மையில் வைரமுத்துவை விடச் சிறந்த கவி வளம் படைத்த கவிஞர் அவர். ஆனால் ஜனரஞ்சக சினிமாவுக்கு எது தேவை, கலைப்படத்துக்கு இது தேவை என்று நுண்ணுணர்வு படைத்த படைப்பாளி இந்த வாலி. தேவையில்லாமல் தன் வித்துவத்திறமையை அவர் மசாலாவுக்குள் போட்டுக் குழப்பி அடிப்பதில்லை.

கொடுமை என்னவென்றால் இளையராஜாவை ஒதுக்க ரஹ்மானைத் தான் பிறப்பித்ததாகச் சொல்லும் வைரமுத்துவை விலக்கி முழுப்பாடல்களும் வாலி என்று அடுத்த ஆண்டே “உழவன்” படத்தில் சேர்த்துக் கொண்டாரே? அப்படியென்றால் ரஹ்மான் கணக்கில் வைரமுத்து ஒரே ஆண்டில் டொக்காகி விட்டாரா?

‪தன்னுடைய திறமையை நம்பாமல் அடுத்தவர் முதுகில் ஏன் இந்த வைரமுத்து இப்படிச் சவாரி செய்ய வேண்டும்?‬

அடுத்தது கே.பாலசந்தரை வைரமுத்து தன் வம்புக்கு இழுத்திருப்பது பற்றி.
புதுப்புது அர்த்தங்கள் படத்தில் தன்னுடைய கவனத்தை மீறி மரகதமணியை வைத்துப் பின்னணி இசையமைத்ததால் இளையராஜாவுக்குச் சினம் வந்ததாக கே.பாலசந்தர் உயிருடன் இருக்கும் காலத்திலேயே ராஜா தன்னிலை விளக்கம் அளித்தவர். அத்தோடு அண்ணாமலை படத்தின் இசையமைப்பு என்ற பெரிய வாய்ப்பையே உதறியவர் ராஜா. அதனால் தான் கே.பாலசந்தர் தேவாவைத் தேட வேண்டியிருந்தது வைரமுத்து அவர்களே.
அத்தோடு சிந்து பைரவி என்ற படத்தில் வைரமுத்து தன் கவித்திறனைக் காட்டியதால் அப்படியே கே.பாலசந்தர் புன்னகை மன்னனைத் தொடர்ந்து இவருக்கொன்றும் அடுத்த படமான மனதில் உறுதி வேண்டும் படத்தில் சிவப்புக் கம்பளம் விரிக்கவில்லையே? மனதில் உறுதி வேண்டும் படத்தின் முழுப் பாடல்களும் வாலியின் கை வண்ணம் ஆச்சே?
‪வைரமுத்துவுக்காக ராஜாவை ஒதுக்கி வைத்திருந்திருக்கலாமே இயக்குநர் கே.பாலசந்தர் அப்போது?‬

இளையராஜாவை விட்டுப் பிரிந்த பின் ஏவிஎம் நிழலில் தான் வைரமுத்து ஒதுங்கினார். அவர்கள் தொடர்ச்சியாகத் தயாரித்த படங்களில் சந்திரபோஸ் என்ற உன்னத இசையமைப்பாளர், மற்றும் சங்கர் - கணேஷ் இரட்டையர்கள், மனோஜ் - கியான், மரகதமணி, தேவேந்திரன், தேவா என்று 37 இசையமைப்பாளர்களின் இசை தன் பாடல்களுக்குப் பொருந்தவில்லையாம். இதை அந்தக் காலத்தில் காக்காய் பிடித்துப் பாட்டு வாய்ப்புக் கேட்கும் போதே சொல்லி விட்டுப் பிச்சை எடுத்திருக்கலாமே வைரமுத்து அவர்களே? முப்பது ஆண்டுகளாகத் தன்னை வளர்த்த இசையமைப்பாளர்களுக்கு இவர் செய்யும் நன்றிக்கடனைப் பாருங்கள்.
உண்மையில் இந்த இசையமைப்பாளர்கள் வைரமுத்துவின் வரிகள் நோகாமல் இசையமைத்த சிறப்பை இசை ரசிகர்கள் நாம் பாரபட்சமின்றி ரசித்துப் போற்றினோமே?
இந்த மாதிரி ஒரு ஈனத்தனமான கருத்துக்கு ஒட்டுமொத்த இசையமைப்பாளர் சங்கமே பொங்கியிருக்கணுமே?

தான் உற்பத்தி பண்ணியதாகச் சொல்லும் 37 இசையமைப்பாளர்களில் சந்திரபோஸ் ஐயும் அடக்கியிருக்கிறார். வைரமுத்துவுக்கு முன்பே சந்திரபோஸ் இசையமைப்பாளராகி விட்ட வரலாறும் இவருக்கு நாம் சொல்லிக் கொடுக்கணுமா?‬

அச்சமில்லை அச்சமில்லை படத்துக்குத் தன்னையே இசையமைக்க வாய்ப்புக் கொடுக்கும்படி பாலசந்தரைக் கேட்டவர் இளையராஜா என்று சொல்லியிருக்கிறார் இசையமைப்பாளர் வி.எஸ்.நரசிம்மன். பாருங்கள் ராஜாவுக்கு எப்பேர்ப்பட்ட காழ்ப்புணர்வு.

வைரமுத்துவின் கணக்கில் ராஜாவை ஓரம் கட்ட ரஹ்மானை அறிமுகப்படுத்தினோம் என்றால் மெல்லிசை மன்னர் விஸவநாதன் நினைத்தாலே இனிக்கும் காலத்தைக் கடந்தும் கே.பாலசந்தருக்கு அதே இனிமை சொட்டப் பாடல்களைக் கொடுத்த போதும் எம்.எஸ்.வியை விட்டு இளையராஜாவிடம் போனது மெல்லிசை மன்னரை ஓரம் கட்டவா?

‪அந்த நேரத்தில் மணிரத்னம் என்ற நட்சத்திர அடையாளம் இல்லாவிட்டால் என்னதான் திறமையிருந்தும் ரஹ்மான் துலங்கியிருப்பாரா? இல்லை வைரமுத்துத்தான் வாய்ப்பு எடுத்துக் கொடுத்திருப்பாரா?‬

“டூயட்” படத்தின் தோல்விக்குப் பின் கே.பாலசந்தர் ரஹ்மானை விட்டு விலகி அடுத்த படமான கல்கியில் தேவாவை இசையமைக்க வைத்ததும், “பார்த்தாலே பரவசம்” படத்தின் படுதோல்விக்குப் பின் கடந்த 18 ஆண்டுகளாக கவிதாலயா நிறுவனத்துக்கோ கே.பாலசந்தருக்கோ ரஹ்மானை இசையமைக்காமல் வைத்திருப்பது கூட இந்த மாதிரி ரஹ்மானை ஓரம் கட்டவே என்று எடுத்துக் கொள்ளலாமா வைரமுத்து அவர்களே?

இளையராஜா ஒருபோதும் இம்மாதிரிப் பேர்வழிகளைத் தன் பக்கம் அண்ட விடக்கூடாது என்பதைக் காலம் கடந்து நிரூபித்திருக்கிறார் வைரமுத்து.

உண்மையில் இந்த உலகத்தில் இளையராஜா போன்று வெளிப்படையாக வாழ்வது கஷ்டம், சூது, வாது, காக்காய் பிடிப்போடு வைரமுத்துவாக வாழ்வது வெகு இலகு.

கானா பிரபா

No comments