யாழ் நீதிமன்றில் முன்னிலையாகாத கோத்தா - வழக்கு ஒத்திவைப்பு

காணாமல் ஆக்கப்பட்ட லலித், குகன் ஆகியோாின் ஆட்கொணா்வு மனு இன்ற யாழ்.நீதிவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் சாட்சிக்கு அழைக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளா் கோட்டாபாய ராஜபக்ஸ மன்றில் முன்னிலையாகாததால் செப்ரெம்பா் 27ம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அத்துடன், கோத்தாபய ராஜபக்சவை அன்றைய தினம் மன்றில் முன்னிலையாகி சாட்சியமளிக்கும் வகையில் அவருக்கு மீளவும் அறிவித்தல் வழங்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டார்.

2011ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் யாழ்ப்பாண நகரில் நடைபெறவிருந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டிருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் ஆவரங்காலில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக அவர்களின் உறவினர்களால் ஆள்கொணர்வு மனு 2012ஆம் ஆண்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு மீதான விசாணையின் போது, இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் 2012ஆம் ஆண்டு செப்ரெம்பர் 19ஆம் திகதி விசாரணைகள் ஆரம்பமாகின. ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்குமார, குகன் முருகானந்தனின் மனைவி, லலித்குமார் வீரராஜின் தந்தையார் ஆகியோர் ஆரம்பத்தில் சாட்சியமளித்திருந்தனர்.

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல உள்ளிட்ட சிலர் சாட்சியமளித்திருந்தனர். இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் இன்று விளக்கத்துக்கு வந்தது.

 இதன்போது சாட்சியம் வழங்குவதற்காக அழைக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, மன்றில் முன்னிலையாகவில்லை. அவர் சார்பில் சட்டத்தரணி அமரசிங்க முற்பட்டார்.

 சாட்சி இன்றைய தினம் மன்றில் முன்னிலையாக முடியவில்லை. அவர் சிங்கப்பூர் வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சை பெற்று அங்கு ஓய்வு எடுத்து வருகிறார். அதனால் அவர் இந்த மன்றில் முன்னிலையாகி சாட்சியமளிக்க தவணை ஒன்றை வழங்குமாறு அவரது சட்டத்தரணி மன்றுரைத்தார்.

அதனால் வழக்கு விசாரணையை வரும் செப்ரெம்பர் 27ஆம் திகதிவரை ஒத்திவைத்து நீதிவான் உத்தரவிட்டார்.

No comments