விடுதலை இல்லையென்றால் கருணைக்கொலை செய்ய அகதிகள் வேண்டுகோள்!

சிறப்புமுகாமில் அடைக்கப்பட்ட ஈழத் தமிழ் அகதிகள் தம்மை விடுதலை செய்யுங்கள் இல்லையேல் கருணைக் கொலை செய்யுங்கள் என்கிறார்கள்.

நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருக்கிறார்கள். எந்த ஒரு அதிகாரியும் சென்று பார்க்கவுமில்லை. எந்தவொரு பதிலும் இதுவரை கூறவில்லை.

ஒருவேளை உண்ணாவிரதம் இருப்பது 3 மாடுகளாக இருந்திருந்தால் இந்நேரம் அம்புலன்ஸ் போயிருக்கும். முழு இந்தியாவும் கவனம் கொண்டிருக்கும்.

என்னசெய்வது? உண்ணாவிரதம் இருப்பது ஒரு தமிழன் அதுவும் கேட்பதற்கு யாருமற்ற அகதித் தமிழன் அல்லவா!

சிறப்புமுகாமை 1990ல் ஆரம்பித்த கலைஞர் கருணாநிதியும் செத்துவிட்டார். ஆனால் அவர் ஆரம்பித்து வைத்து சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம் இன்னும் மூடப்படவில்லை.

யுத்தம் முடிந்து 10 வருடமாகிவிட்டது. ஆனால் வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில் தொப்புள் கொடி உறவுகளை அடைக்க உருவாக்கிய சிறப்புமுகாம் இன்னும் மூடப்படவில்லை.

இதுவரை திராவிடம் வாழ்க என்றவர்கள் இப்போது தமிழ் வாழ்க என்கிறார்கள்.

இதுவரை இந்தியா வாழ்க என்றவர்கள் இப்போது தமிழ்நாடு வாழ்க என்கிறார்கள்.

ஆனால் எமது தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர்களோ மோடி விமான டிக்கட் அனுப்புவார் டில்லியில் தீர்வு தரப் போகிறார் என்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

தமிழக எம்.பி க்கள் “தமிழ் வாழ்க” “தமிழ்நாடு வாழ்க” என்று கோஷம் போட்டதையே பொறுத்துக் கொள்ள முடியாத மோடி அரசு ஈழத் தமிழர்களுக்கு தீர்வு பெற்று தரப் போகிறதாம்.

இதைத்தான் இலவு காத்த கிளிகள் என்பதோ?

-பாலன் சந்திரன்-

No comments