700 ரூபாவிற்கு வாளினை அடக்கு வைத்தவருக்கும் வாங்கியவருக்கும் விளக்கமறியல்

யாழ்.நாவாந்துறை பகுதியில் வாள் ஒன்றை குளத்திற்குள் வீச முயற்சித்தவரையும், அந்த இளைஞனுக்கு வாள் கொடுத்தவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நாவந்துறைப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இராணுவத்தினர் , சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்புத் தேடுதலை முன்னெடுத்தனர்.
அதன்போது நாவாந்துறை நாவலர் வீதிக்கு அண்மையுள்ள குளம் ஒன்றுக்குள் வாள் ஒன்றை வீச முற்பட்ட இளைஞன் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் முன்னெடுத்த விசாரணையில் வாளை குளத்தில் வீசுமாறு வழங்கிய மற்றொருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.
சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி “வாள் சந்தேகநபருடையது இல்லை. 
அதனை அவர் 700 ரூபாவுக்கு அடகு பிடித்தார். சுற்றிவளைப்பு நடவடிக்கையார் வாளை குளத்துக்குள் வீசுவதற்கு நண்பரிடம் வழங்கினார். 
அவர் அதனை குளத்துக்குள் வீசிய போது பொலிஸார் கண்டனர்” என மன்றுரைத்தார். சந்தேகநபர்“வாளைப் பார்த்த போது பிடித்திருந்த்து. அதனால் அதனை 700 ரூபாவுக்கு அடகு பிடித்தேன்” என்று ஒப்புக் கொண்டார்.
வழக்கை விசாரித்த நீதிவான், வாளை உடமையில் வைத்திருப்பது பாரதூரமானது எனக் குறிப்பிட்டு சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

No comments