ரிஷாட் பதியூதீன் ராஜினாமா:ரணில் கோரிக்கை?


இலங்கை அரசின் கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனை தானாக பதவி விலக ரணில் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரியவருகின்றது. ஒன்றிணைந்த எதிரணியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, ஆதரவளிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்வரிசை உறுப்பினர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர் என செய்திகள் ஒருபுறம் வெளிவர மறுபுறம் ஆளும் தரப்பின் அமைச்சர்கள் சிலரும் ஆதரவளிக்கும் நிலைக்கு சென்றிருப்பதாக தெரியவருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 பேரில், எட்டுபேர், யோசனைக்கு ஆதரவளிப்பதற்குத் தீர்மானித்துள்ளனர் .ஆயினும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க இரா.சம்பந்தனிடம் ; ரிஷாட் பதியூதீன் கோரியுள்ளார்.இந்நிலையில் இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாரம் கூடி ஆராயவுள்ளது. 

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதே தனது தனிப்பட்ட அபிப்பிராயம் எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், “இது தொடர்பில் தமது கட்சியின் தீர்மானம் என்னவென்பது குறித்து, இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள கட்சியின் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்” என்றார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாகச் செயற்படவுள்ளதாக, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்டக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

அத்துடன்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் தீர்மானம் எவ்வாறு இருந்தாலும் பரவாயில்லை, தனது தனிப்பட்ட தீர்மானமாக, அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாகவே வாக்களிப்பதாகவும், தனது முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

இந்நிலையிலேயே கூட்டமைப்பின் ஆதரவும் இழக்கப்படுமானால் பிரேரணை வெற்றி பெற்றால் அரசு கவிழும் நிலை ஏற்படாலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனையடுத்தே ரணில் அமைச்சு பதவியிலிருந்து விலகி அரசை தக்க வைக்க உதவ ரிஷாட் பதியூதீனை நேற்றிரவு கோரியதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது.

No comments