நெஞ்சைப் பிளக்கும் உயிர்ப்பலி! குண்டுவெடிப்புக்கு வைகோ கடும் கண்டனம்


இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு தமிழக தலைவர்களும் பலர்  கண்டனங்களையும் வருத்தங்களையம் தெரிவித்து வருகின்றார்கள் அந்தவகையில் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர்
வைகோ விடுத்துள்ள செய்தியில்
உலகம் முழுவதிலும் இயேசு பெருமான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும் வேளையில், இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் குண்டு வெடிப்புத் தாக்குதல்கள் நடைபெற்று உள்ள செய்தி இதயத்தை நடுங்க வைக்கிறது.
இதுவரையில் மொத்தம் எட்டு இடங்களில் குண்டு வெடிப்புக்கள் நடந்துள்ளன. அதில் பலியானோர் எண்ணிக்கை 200க்கும் மேற்பட்டு உள்ளதாகவும், வெளிநாட்டவர்கள் 12 பேர் உயிரிழந்ததாகவும், 500 க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றுள்ளதாகவும் செய்தி கூறுகிறது.
ஈவு இரக்கமற்ற பயங்கரவாதத்தில் ஈடுபட்ட கொலைபாதகர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
கொச்சிக்கடா புனித அந்தோணியார் ஆலயம், மட்டக்களப்பு தேவாலயம், ஈழத்தமிழர்கள் நிறைந்த பகுதிகளில் உள்ளன. குண்டு வெடிப்பில் தகர்ந்த நீர்க்கொழும்பு தேவாலயத்தில் இருந்த பெரும்பாலானோர் கொல்லப்பட்டு உள்ளனர்.
உயிர் இழந்தோர் குடும்பத்தினருக்குக் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிப்பதுடன், படுகாயமுற்றோருக்கு தக்க சிகிச்சை வழங்கிக் காப்பாற்ற வேண்டிய நடவடிக்கைகளில் இலங்கை அரசும், அனைத்துப் பொதுநல அமைப்புகளும் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

No comments